கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை

(கார்ல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்)

தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
நன்றி: www.marxism.in
1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை

தொழிலாளர்களின் சர்வதேசச் சங்கமாகிய கம்யூனிஸ்டுக் கழகம் (Communist League)[1] அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைமைகளில் ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இக்கழகம் கட்சியின் விரிவான கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்துத் தருமாறு அடியில் கையொப்பம் இட்டுள்ளோரைப் [மார்க்ஸ், ஏங்கெல்ஸைக் குறிக்கிறது] பணித்தது. இவ்வாறு பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை. இதன் கையெழுத்துப் பிரதி, அச்சிடப்படுவதற்காக, பிப்ரவரி புரட்சிக்கு[2] ஒருசில வாரங்களுக்கு முன்னால் லண்டனுக்குப் பயணித்தது. முதலில் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. பிறகு ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் குறைந்தது பன்னிரண்டு பதிப்புகளில் ஜெர்மன் மொழியில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் முதன்முதலாக 1850-இல் லண்டன் நகரத்துச் சிவப்புக் குடியரசுவாதி (Red Republican)[3] பத்திரிக்கையில் வெளியானது. இந்த மொழிப்பெயர்ப்பைச் செய்தவர் மிஸ் ஹெலன் மக்ஃபர்லேன் (Helen Macfarlane). 1871-இல், அமெரிக்காவில் குறைந்தது மூன்று வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பு முதன்முதலில், 1848-ஆம் ஆண்டு ஜூன் எழுச்சிக்குச்[4] சிறிது காலத்துக்கு முன்பாகப் பாரிசில் வெளியானது, அண்மையில் நியூயார்க் நகரத்து சோஷலிஸ்டு (Le Socialiste)[5] பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. புதிய மொழிபெயர்ப்பு ஒன்று தயாராகி வருகிறது. முதன்முதலில் ஜெர்மன் மொழியில் வெளிவந்த சிறிது காலத்திலேயே போலிஷ் பதிப்பு ஒன்று லண்டனில் வெளியானது. அறுபதுகளில் ருஷ்ய மொழிபெயர்ப்பு ஒன்று ஜெனீவாவில் வெளிவந்தது. முதன்முதலில் வெளியாகிய குறுகிய காலத்துக்குள்ளேயே டேனிஷ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்பட்டுள்ள புரட்சிகர நடவடிக்கைகள் மீது தனிச்சிறப்பான அழுத்தம் எதுவும் தரப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தைப் பல கூறுகளில் இன்றைக்கு மிகவும் வேறுபட்ட சொற்களில் எழுத வேண்டியிருக்கும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது; அதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட, விரிவடைந்த கட்சி அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது; முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு அதனினும் முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும்[6] சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது). தவிரவும், சோஷலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை போதுமானதல்ல என்பது கூறாமலே விளங்கும். ஏனெனில் 1847-ஆம் ஆண்டு வரைதான் அதில் அலசப்பட்டுள்ளது. அத்தோடு, பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாட்டு அளவில் இன்றும் சரியானவையே. என்றாலுங்கூட, நடைமுறையில் காலங் கடந்தவையே. காரணம், இன்றைக்கு அரசியல் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வரலாற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, அப்பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்தே துடைத்தெறிந்துவிட்டது.

ஆனாலும் அறிக்கையானது[7] ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை. 1847-லிருந்து இன்றுவரையுள்ள இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு அடுத்து ஒரு பதிப்பு வெளிவரக்கூடும். தற்போது இந்த மறுபதிப்பு மிகவும் எதிர்பாராத நிலையில் வெளியாவதால், இப்பணியைச் செய்துமுடிக்க எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது.

கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

-----------------------------------------------------------------
ஒரு பூதம் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது – அதுதான் கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும்[27] ஜார் அரசனும்[28] , மெட்டர்னிக்கும்[29] கிஸோவும்[30] , பிரெஞ்சுத் தீவிரக் கொள்கையினரும் (radicals) ஜெர்மன் போலீஸ் ஒற்றர்களும் எனப் பழைய ஐரோப்பாவின் அதிகார சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை விரட்டுவதற்காக ஒரு புனிதக் கூட்டணியை அமைத்துள்ளன.

ஆட்சியிலுள்ள எதிராளிகளால் கம்யூனிஸ்டு என்று பழி தூற்றப்படாத எதிர்க்கட்சி எங்கேனும் உண்டா? தன்னிலும் முற்போக்கான எதிர்க் கட்சிகள் மீதும், தனது பிற்போக்கான எதிராளிகள் மீதும் கம்யூனிஸ்டு எனப் பட்டம் சூட்டி, அவதூறுச் சேற்றை அள்ளி வீசாத எதிர்க்கட்சிதான் எங்கேனும் இருக்கிறதா?

இந்த உண்மையிலிருந்து இரண்டு முடிவுகள் பெறப்படுகின்றன:

1. கம்யூனிசம் அதனளவில் ஒரு தனிப்பெரும் சக்தி என்பதை ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுவிட்டன.

2. கம்யூனிஸ்டுகள் தம் கருத்துக்களையும், தம் இலட்சியங்களையும், தம் போக்குகளையும் அனைத்துலகும் அறியும் வண்ணம் பகிரங்கமாக வெளியிடவும், [கம்யூனிஸ்டுக்] கட்சிக்கே உரிய ஓர் அறிக்கை மூலம், கம்யூனிசப் பூதமென்னும் இந்தக் குழந்தைக் கதையை எதிர்கொள்ளவும் வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இந்த நோக்கத்துடன், பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் லண்டனில் கூடி, ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஃபிளெமிஷ், டேனிஷ் ஆகிய மொழிகளில் வெளியிடுவதற்கென பின்வரும் அறிக்கையை வரைந்தனர்.

அத்தியாயம்-1
முதலாளிகளும் பாட்டாளிகளும்[ஏ4]

இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும்[ஏ5] வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்.

[ஏ4] முதலாளித்துவ வர்க்கம் (Bourgeoisie) என்பது [இன்றைய] நவீன முதலாளிகளின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் சமூக உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள்; கூலி உழைப்பாளிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறவர்கள். பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்பது [இன்றைய] நவீனக் கூலித் தொழிலாளர்களின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் தமக்கெனச் சொந்தமாக உற்பத்திச் சாதனங்கள் ஏதும் இல்லாதவர்கள்; வாழ்க்கையை நடத்துவதற்காகத் தம் உழைப்புச் சக்தியை விற்க வேண்டிய நிலைக்குத் தாழ்த்தப்பட்டிருப்பவர்கள். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

[ஏ5] அதாவது, எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் என்று பொருள். வரலாற்றுக்கு முந்தைய சமுதாயம் பற்றி, அதாவது, எழுத்தில் பதிவாகியுள்ள வரலாற்றுக்கு முன்பு நிலவிய சமூக ஒழுங்கமைப்பு பற்றி, 1847-இல் அனேகமாக எதுவுமே அறியப்படவில்லை. அதன்பிறகு, ஹாக்ஸ்தவுசென்[31] (Haxthusen) ருஷ்யாவில் நிலம் பொது உடைமையாக இருப்பதைக் கண்டுபிடித்தார். டியூட்டானிய (Teutonic) இனங்கள் அனைத்தும், அத்தகைய நிலப் பொது உடைமையைச் சமூக அடித்தளமாகக் கொண்டுதான் வரலாற்றில் தம் வாழ்வைத் தொடங்கின என்று மவுரர் (Maurer)[32] நிரூபித்தார். இந்தியாவிலிருந்து அயர்லாந்துவரை எங்குமே [நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்ட] கிராமச் சமூகங்கள் (Village Communities) சமுதாயத்தின் புராதன வடிவமாக இருக்கின்றன அல்லது இருந்துள்ளன என்பது காலப்போக்கில் அறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டியதுபோல, கணம் (gens) என்னும் [இனக்குழு] அமைப்பின் உண்மையான தன்மையையும், பூர்வகுடியோடு (tribe) அதற்குள்ள உறவையும் கண்டுபிடித்து, இந்தப் புராதனக் கம்யூனிச சமுதாயத்தின் உள்ளமைப்பை அதன் முன்மாதிரியான வடிவத்தில் மார்கன் (Morgan)[33] வெட்ட வெளிச்சமாக்கினார். இந்தப் புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்தவுடன், சமுதாயம் தனித்தனியான, இறுதியில் பகைமை பாராட்டும் வர்க்கங்களாகப் பிளவுபடத் தொடங்குகிறது. “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” (இரண்டாம் பதிப்பு, ஷ்டுட்கார்ட், 1886) என்னும் நூலில் [புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்த] இந்த நிகழ்ச்சிப் போக்கைத் தொடக்கத்திலிருந்து மீண்டும் வரைந்து காட்ட நான் முயன்றுள்ளேன். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

சுதந்திரமானவனும் அடிமையும், உயர்குலச் சீமானும் (patrician) பாமரக் குடிமகனும் (plebeian), நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைக் குழும எஜமானும் (guild-master)[ஏ6] கைவினைப் பணியாளனும் (journeyman), சுருங்கக் கூறின், ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொண்டிருந்தனர். சில நேரம் மறைவாகவும், சில நேரம் வெளிப்படையாகவும், இடையறாத போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒவ்வொரு முறையும் இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றியமைப்பதிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோதான் முடிந்திருக்கிறது.

[ஏ6] கைவினைக் குழும எஜமான் (guild-master), அதாவது, கைவினைக் குழுமத்தின் முழு உறுப்பினன், கைவினைக் குழுமத்துக்கு உட்பட்ட எஜமான், கைவினைக் குழுமத்தின் தலைவன் அல்ல. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

வரலாற்றின் தொடக்ககாலச் சகாப்தங்களில், அனேகமாக எங்கும், பல்வேறு அடுக்குகள் கொண்ட, சிக்கலான ஒரு சமுதாய ஏற்பாட்டைக் காண்கிறோம். சமூக அந்தஸ்தில் பல்வேறு படிநிலை அமைப்புகள் இருக்கக் காண்கிறோம். பண்டைய ரோமாபுரியில் உயர்குலச் சீமான்கள், வீர மறவர்கள், பாமரக் குடிமக்கள், அடிமைகள் எனவும், மத்திய காலத்தில் நிலப்பிரபுக்கள், மானியக்காரர்கள் (vassals), கைவினைக் குழும எஜமானர்கள், கைவினைப் பணியாளர்கள், பயிற்சிப் பணியாளர்கள், பண்மையடிமைகள் எனவும் பல்வேறு வர்க்கப் பிரிவினர் இருக்கக் காண்கிறோம். மேலும், அனேகமாக இந்த வர்க்கங்கள் அனைத்திலும் ஒன்றன்கீழ் ஒன்றான உட்பிரிவுகள் இருந்ததையும் காண முடிகிறது.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளை ஒழித்துவிடவில்லை. ஆனால், பழையவற்றுக்குப் பதிலாகப் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் உருவாக்கி வைத்துள்ளது.

எனினும், நமது சகாப்தமான முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம் ஒரு தனித்த பண்பியல்பைக் கொண்டுள்ளது: வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் - முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் - இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.

ஆதி நகரங்களின் சுதந்திரமான நகரத்தார், மத்திய காலத்துப் பண்ணையடிமைகளிலிருந்து உதித்தெழுந்தார்கள். இந்த நகரத்தாரிலிருந்தே முதலாளித்துவ வர்க்கத்தின் தொடக்கக் கூறுகள் வளர்ந்தன. அமெரிக்காவைக் கண்டுபிடித்ததும், நன்னம்பிக்கை முனையைச் சுற்றிச் செல்லும் கடல்வழி அறியப்பட்டதும், வளர்ந்துவந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. கிழக்கிந்திய, சீனச் சந்தைகள், அமெரிக்கக் காலனியாக்கம், காலனிகளுடனான வியாபாரம், பரிவர்த்தனைச் சாதனங்களிலும் பொதுவாக விற்பனைப் பண்டங்களிலும் ஏற்பட்ட பெருக்கம் - ஆகிய இவையெல்லாம், வணிகத்துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் தொழில்துறைக்கும் இதற்குமுன் என்றும் கண்டிராத அளவுக்கு உத்வேகம் ஊட்டின. தள்ளாடிக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் புரட்சிகரக் கூறின் அதிவிரைவான வளர்ச்சிக்கும் அதன்மூலம் தூண்டுதல் அளித்தன.

நிலப்பிரபுத்துவம் சார்ந்த தொழில்துறை அமைப்புமுறையின்கீழ், தொழில்துறை உற்பத்தியானது, குறிப்பிட்டவர் மட்டுமே அங்கம் வகிக்கும் கைவினைக் குழுமங்களின் ஏகபோகமாக இருந்தது. இத்தகைய தொழில்துறை அமைப்புமுறையால், தற்போதைய சூழலில், புதிய சந்தைகளின் வளர்ந்துவரும் தேவைகளை இனிமேலும் நிறைவு செய்ய இயலவில்லை. அதன் இடத்தில் பட்டறைத் தொழில் அமைப்புமுறை வந்தது. பட்டறைத் தொழில்சார்ந்த நடுத்தர வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களைப் புறந்தள்ளியது. தொழில்முறையில் இணைந்து செயல்பட்ட வெவ்வேறு கைவினைக் குழுமங்களுக்கு இடையே நிலவிய உழைப்புப் பிரிவினை, ஒவ்வொரு தனித்த பட்டறையிலும் ஏற்பட்ட உழைப்புப் பிரிவினைக்கு முன்னே மறைந்தொழிந்தது.

இதற்கிடையே, சந்தைகள் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே இருந்தன. தேவையோ மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பட்டறைத் தொழில்முறையுங்கூட இப்போது ஈடுகட்ட இயலாமல் போனது. இந்த சூழ்நிலையில்தான் நீராவியும் எந்திரங்களும் தொழில்துறை உற்பத்தியைப் புரட்சிகரமானதாக ஆக்கின. பட்டறைத் தொழில்முறையின் இடத்தைப் பிரம்மாண்ட நவீனத் தொழில்துறை பிடித்துக் கொண்டது. பட்டறைத் தொழில் சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள், ஒட்டுமொத்தத் தொழில்துறைப் படையணிகளின் தலைவர்கள், அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாயினர்.

நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த செயல் இதற்குப் பாதையமைத்துக் கொடுத்தது. உலகச் சந்தையானது, வர்த்தகத்துக்கும், கப்பல் போக்குவரத்துக்கும், தரைவழித் தகவல் தொடர்புக்கும் அளப்பரும் வளர்ச்சியைத் அளித்தது. இந்த வளர்ச்சி தன் பங்குக்குத் தொழில்துறையின் விரிவாக்கத்துக்கு வித்திட்டது. தொழில்துறை, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை எந்த அளவுக்கு விரிவடைந்தனவோ அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சியடைந்தது. அது தனது மூலதனத்தைப் பெருக்கியது. மத்திய காலம் விட்டுச் சென்றிருந்த ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்குத் தள்ளியது.

இவ்வாறு, நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே, நீண்டதொரு வளர்ச்சிப் போக்கின் உடன்விளைவு - உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த புரட்சிகளின் உடன்விளைவு – என்பதை நாம் காண்கிறோம்.

முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவ்வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் சேர்ந்தே வந்தது. நிலப்பிரபுத்துவச் சீமான்களின் ஆதிக்கத்தின்கீழ் அது ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருந்தது. மத்திய காலக் கம்யூனிலோ[ஏ7] ஆயுதமேந்திய, சுயாட்சி நடத்தும் சங்கமாக இருந்தது. இங்கே (இத்தாலியிலும் ஜெர்மனியிலும் காணப்பட்டது போல) சுதந்திரமான நகர்ப்புறக் குடியரசாகவும், அங்கே (ஃபிரான்சில் காணப்பட்டது போல) வரி செலுத்தும் 'மூன்றாவது வகையின' (third estate)[34] மக்கள் குழுவாகவும் விளங்கியது. அதன்பின்னர் பட்டறைத் தொழில் மேலோங்கிய காலகட்டத்தில், பிரபுத்துவச் சீமான்களுக்கு எதிரான ஈடுகட்டும் சக்தியாக இருந்துகொண்டு, அரை நிலப்பிரபுத்துவ முடியாட்சிக்கு அல்லது ஏதேச்சதிகார முடியாட்சிக்குச் சேவை செய்தது. பொதுவாகப் பார்த்தால், உண்மையில் மாபெரும் முடியாட்சிகளின் ஆதாரத் தூணாக விளங்கியது. முடிவாக, முதலாளித்துவ வர்க்கம், நவீனத் தொழில்துறையும் உலகச் சந்தையும் நிறுவப்பட்ட பின்னர், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசமைப்பில் ஏகபோக அரசியல் ஆதிக்கத்தைத் தனக்கென வென்று கொண்டது. நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல.

[ஏ7] ”கம்யூன்” என்பது ஃபிரான்சில் புதிதாக உருவாகி வந்த நகரங்களுக்கு இடப்பட்ட பெயராகும். நிலப்பிரபுத்துவச் சீமான்களிடமிருந்தும் எஜமானர்களிடமிருந்தும், “மூன்றாவது வகையினம்” (Third Estate) என்ற முறையில் வட்டார சுயாட்சியையும், அரசியல் உரிமைகளையும் வென்றெடுப்பதற்கும் முன்பே, அந்நகரங்கள் இப்பெயரை ஏற்றன. பொதுவாகக் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இங்கிலாந்தும், அதன் அரசியல் வளர்ச்சிக்கு ஃபிரான்சும், மாதிரி நாடுகளாக இந்த அறிக்கையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

இத்தாலி, ஃபிரான்சு ஆகிய நாடுகளின் நகரவாசிகள், அவர்களின் நிலப்பிரபுத்துவச் சீமான்களிடமிருந்து சுயாட்சிக்கான தொடக்க உரிமைகளை விலைகொடுத்து அல்லது போராடிப் பெற்ற பிறகு, தங்களின் நகர்ப்புற சமூகங்களுக்கு [“கம்யூன்” என்னும்] இப்பெயரை இட்டுக் கொண்டனர். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியாக, மிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது.

எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. ”இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற ”பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வேகம், பேராண்மையின் வீராவேசம், போலிப் பண்புவாதிகளின் (philistines) உணர்ச்சிவயம் ஆகியவற்றால் ஏற்படும் அதி தெய்வீக ஆனந்தப் பரவசங்களைத் தன்னகங்காரக் கணக்கீடு என்னும் உறைபனி நீரில் மூழ்க்கடித்துவிட்டது. மனித மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. துறக்கவொண்ணாத, எழுதி வைக்கப்பட்ட, எண்ணற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாகச் சுதந்திரமான வணிகம் என்னும் ஒரேவொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது. சுருங்கச் சொல்லின், முதலாளித்துவ வர்க்கம், மதம் மற்றும் அரசியல் பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது.

இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.

பிற்போக்காளர்கள் போற்றிப் பாராட்டும் மத்திய காலத்துச் செயல்வீரப் பகட்டுத்தனம், எவ்வாறு சோம்பல் நிறைந்த செயலின்மையை உற்ற துணையாக்கி உறவாடிக் கிடந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் அம்பலப்படுத்திவிட்டது. மனிதனின் செயல்பாடு என்னவெல்லாம் சாதிக்க வல்லது என்பதை முதன்முதலாக எடுத்துக் காட்டியது முதலாளித்துவ வர்க்கம்தான். எகிப்தியப் பிரமிடுகளையும், ரோமானிய மூடுகால்வாய்களையும், கோதிக் தேவாலயங்களையும் பெரிதும் மிஞ்சக்கூடிய அதிசயங்களை அது சாதித்துக் காட்டியுள்ளது. முற்காலத்தில் நிகழ்ந்த தேசங்களின் பெருந்திரளான குடிபெயர்ப்புகளையும், சிலுவைப் போர்களையும்[35] மிகச் சாதாரணமாகத் தோன்றச் செய்யும் மாபெரும் படையெடுப்புகளை அது நிகழ்த்தியுள்ளது.

உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.

முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக்கொள்ள வேண்டும்; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்; எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும்.

உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன்மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது. பிற்போக்காளர்கள் கடுங்கோபம் கொள்ளும் வகையில், [ஒவ்வொரு நாட்டிலும்] தொழில்துறை எழும்பி நின்றுள்ள அதன் தேசிய அடித்தளத்தை அகற்றிவிட்டது. நெடுங்காலமாக நிலைபெற்றிருந்த தேசியத் தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை ஒழித்துக்கட்டப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களை நிறுவுவது, நாகரிகமடைந்த நாடுகள் அனைத்துக்கும் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையாகி விடுகிறது. இந்தப் புதிய தொழில்கள் முந்தைய தொழில்களைப்போல் உள்நாட்டு மூலப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. இவற்றுக்கான மூலப் பொருள்கள் தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நுகரப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்திப் பொருள்களால் நிறைவு செய்யப்பட்ட பழைய தேவைகளின் இடத்தில் புதிய தேவைகள் எழுந்துள்ளதைக் காண்கிறோம். அவற்றை நிறைவு செய்யத் தொலைதூர நாடுகளிலும் பிரதேசங்களிலும் உற்பத்தியாகும் பொருள்கள் தேவைப்படுகின்றன. தேசங்களும் வட்டாரங்களும் தனித்தொதுங்கி நின்றும், தன்னிறைவு கண்டும் இருந்த நிலை மாறி, ஒவ்வொரு திசையிலும் பரஸ்பரப் பிணைப்பும், தேசங்களுக்கிடையே ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் உலகளாவிய சார்புத் தன்மையும் நிலவக் காண்கிறோம். நுகர்பொருள் உற்பத்தியில் எப்படியோ அறிவுத்துறை உற்பத்தியிலும் அதே நிலைதான். தனித்தனி நாடுகளின் அறிவுசார் படைப்பாக்கங்கள் அனைத்து நாடுகளின் பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்சப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மேலும் மேலும் சாத்தியமின்றிப் போகின்றன. எண்ணற்ற தேசிய, வட்டார இலக்கியங்களிலிருந்து ஓர் உலக இலக்கியம் உதயமாகிறது.

அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல் தொடர்பு சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது; அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து தேசங்களையும் நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது, அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறக் கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக் கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.

முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்களின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டது. மாபெரும் நகரங்களை உருவாக்கியுள்ளது. நாட்டுப்புற மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற மக்கள் தொகையைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறாக, மக்கள் தொகையில் கணிசமான ஒரு பகுதியினரைக் கிராம வாழ்க்கையின் மடமையிலிருந்து மீட்டுள்ளது. நாட்டுப்புறம் நகரங்களைச் சார்ந்திருக்குமாறு செய்துள்ளதைப் போன்றே, அநாகரிக நிலையிலும் அரை-நாகரிக நிலையிலுமுள்ள நாடுகள் நாகரிக நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், விவசாயிகளின் நாடுகள் முதலாளித்துவ நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், கிழக்கு நாடுகள் மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்குமாறும் செய்துள்ளது.

மக்கள் தொகையும், உற்பத்திச் சாதனங்களும், சொத்துகளும் சிதறுண்டு கிடக்கும் நிலையை முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் ஒழித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுதலாகும். தமக்கென தனியான நலன்கள், சட்டங்கள், அரசாங்கங்கள், வரிவிதிப்பு முறைகளைக் கொண்ட, சுயேச்சையான அல்லது தளர்ந்த இணைப்புக் கொண்டிருந்த மாநிலங்கள், ஒரே அரசாங்கம், ஒரே சட்டத் தொகுப்பு, ஒரே தேசிய வர்க்க நலன், ஒரே தேச எல்லை, ஒரே சுங்கவரி முறைகொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைந்துவிட்டன.

முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிப் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்சாரத் தந்தி, கண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல், கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல், மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?

ஆக நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும், பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும், விவசாயம், பட்டறைத் தொழில் ஆகியவற்றில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும், சுருங்கக் கூறின், நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இனிமேலும் ஒவ்வாதவை ஆயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாக மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.

அவற்றின் இடத்தில் தடையற்ற போட்டியும், அதனுடன் கூடவே அதற்கு ஏற்றாற் போன்ற சமூக, அரசியல் அமைப்புச் சட்டமும், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.

இதேபோன்ற ஓர் இயக்கம் [இப்போது] நம் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது. தனக்கே உரிய உற்பத்தி உறவுகளையும், பரிவர்த்தனை உறவுகளையும் சொத்துடைமை உறவுகளையும் கொண்டுள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் - இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளது தொழில்துறை, வணிகம் ஆகியவற்றின் வரலாறானது, நவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆட்சியதிகாரமும் நிலவுதற்கு அடிப்படையாக விளங்கும் சொத்துடைமை உறவுகளுக்கு எதிராகவும், நவீன உற்பத்தி சக்திகள் நடத்தும் கலகத்தின் வரலாறே ஆகும். இதனை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த நெருக்கடிகளின்போது, இருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களின் பெரும்பகுதி மட்டுமன்றி, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலும் அபத்தமானதாகக் கருதப்பட்டிருக்கும் ஒரு கொள்ளை நோய் – தேவைக்கு அதிகமான உற்பத்தி என்னும் கொள்ளை நோய் - இந்த நெருக்கடிகளின்போது தொற்றுகிறது. சமுதாயம், தான் திடீரெனெத் தற்காலிக அநாகரிக நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது. ஏதோ ஒரு பெரும் பஞ்சம் அல்லது உலகளாவிய ஒரு சர்வநாசப் போர் ஏற்பட்டு வாழ்வாதாரப் பொருள்கள் அனைத்தின் வினியோகமும் நிறுத்தப்பட்டதுபோல் தோன்றுகிறது; தொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது; ஏன் இப்படி? காரணம், இங்கே மிதமிஞ்சிய நாகரிகம், மிதமிஞ்சிய வாழ்வாதாரப் பொருள்கள், மிதமிஞ்சிய தொழில்கள், மிதமிஞ்சிய வணிகம் இருப்பதுதான். சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாக, அந்த உறவுகளை மீறி உற்பத்தி சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன. உற்பத்தி சக்திகள் இந்தத் தளைகளைக் தகர்த்தெறியத் தொடங்கியதுமே அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் விளைவிக்கின்றன; முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தைத் தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு, முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்தி சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.

எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோ, அதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. ஆனால், முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லை; அந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும், அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.

முதலாளித்துவ வர்க்கம், அதாவது மூலதனம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கமும் வளர்கிறது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வேலை கிடைக்கும் வரைதான் வாழ முடியும்; இவர்களின் உழைப்பு மூலதனத்தைப் பெருக்கும் வரைதான் இவர்களுக்கு வேலையும் கிடைக்கும். தம்மைத்தாமே கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு விற்றாக வேண்டிய நிலையிலுள்ள இந்தத் தொழிலாளர்கள், ஏனைய பிற விற்பனைப் பொருள்களைப் போன்று ஒரு பரிவர்த்தனைப் பண்டமாகவே இருக்கிறார்கள். அதன் விளைவாக, வணிகப் போட்டியின் அனைத்து வகையான சாதக பாதகங்களுக்கும், சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துக்கும் இலக்காகிறார்கள்.

பரந்த அளவில் எந்திரங்களின் பயன்பாடு, உழைப்புப் பிரிவினை ஆகியவற்றின் காரணமாக, பாட்டாளிகளின் வேலையானது அதன் தனித்தன்மை முழுவதையும் இழந்துவிட்டது. அதன் விளைவாக, தொழிலாளிக்கு தன் வேலை மீதிருந்த ஈர்ப்பு முழுவதும் இல்லாமல் போனது. அவர் எந்திரத்தில் பொருத்தப்பட்ட ஒரு துணையுறுப்பாக ஆகிவிடுகிறார். அவரது வேலையைச் செய்ய அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் மிகவும் எளிமையான, மிகவும் சலிப்பூட்டும்படியான, மிகவும் எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய சாமர்த்தியம் மட்டுமே. எனவே ஒரு தொழிலாளியின் உற்பத்திச் செலவு என்பது, அனேகமாக முற்றிலும் அவருடைய பராமரிப்புக்காகவும், அவருடைய இன விருத்திக்காகவும், அவருக்குத் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவுக்குக் குறுகிவிடுகிறது. ஆனால் ஒரு பண்டத்தின் விலை – ஆகவே உழைப்பின் விலை[36] – அதன் உற்பத்திச் செலவுக்குச் சமம் ஆகும். எனவே, வேலையின் வெறுப்பூட்டும் தன்மை அதிகரிக்கும் அளவுக்கு கூலி குறைகிறது. அதுமட்டுமல்ல, எந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றனவோ, அந்த அளவுக்கு வேலைப் பளுவும் அதிகமாகிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையைக் கூடுதலாக்குவதன் மூலமோ, அல்லது எந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ, இன்னபிற வழிகளிலோ இது நடந்தேறுகிறது. நவீனத் தொழில்துறையானது, தந்தைவழிக் குடும்ப எஜமானனின் மிகச்சிறிய தொழில்கூடத்தைத் தொழில் முதலாளியின் மிகப்பெரிய தொழிற்சாலையாக மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் குவிக்கப்பட்டுள்ள திரளான தொழிலாளர்கள் படைவீரர்களைப்போல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். தொழில்துறை ராணுவத்தின் படைவீர்ர்கள் என்ற முறையில் இவர்கள், அதிகாரிகளையும் அணித்தலைவர்களையும் (officers and sergeants) கொண்ட, ஒரு துல்லியமான படிநிலை அமைப்பினுடைய அதிகாரத்தின்கீழ் வைக்கப்படுகிறார்கள். இவர்கள் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் அடிமைகளாக இருப்பது மட்டுமல்ல, நாள்தோறும் மணிதோறும் எந்திரத்தாலும், மேலாளர்களாலும், அனைத்துக்கும் மேலாகத் தனிப்பட்ட முதலாளித்துவத் தொழிலதிபராலும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். லாபமே தன் இறுதி லட்சியம், குறிக்கோள் என இந்தக் கொடுங்கோன்மை, எந்த அளவுக்கு அதிக வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிறதோ அந்த அளவுக்கு அது மேலும் அற்பமானதாக, மேலும் வெறுக்கத்தக்கதாக, மேலும் கசப்பூட்டுவதாக இருக்கிறது.

உடலுழைப்புக்கான திறமை மற்றும் உடல் வலிமை எந்த அளவுக்குக் குறைவாகத் தேவைப்படுகின்றதோ, அதாவது நவீனத் தொழில்துறை எந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ச்சி பெறுகின்றதோ, அந்த அளவுக்கு மேலும் மேலும் ஆண்களின் உழைப்புப் பெண்களின் உழைப்பால் அகற்றப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்துக்கு வயது வேறுபாடும், ஆண், பெண் என்கிற பால் வேறுபாடும் இனிமேல் எவ்வித தனித்த சமூக முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. அனைவருமே உழைப்புக் கருவிகள்தாம். அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆகும் செலவு மட்டும் அவர்களின் வயதுக்கும் பாலினத்துக்கும் தக்கவாறு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது.

ஆலை முதலாளியால் குறிப்பிட்ட மணிநேரம் சுரண்டப்பட்ட தொழிலாளி, முடிவில் தன் கூலியைப் பணமாகப் பெற்றுக் கொண்ட மறுகணம், முதலாளித்துவ வர்க்கத்தின் பிற பகுதியினரான வீட்டுச் சொந்தக்காரர், கடைக்காரர், அடகுக்காரர், மற்றும் இன்ன பிறரரிடம் அகப்பட்டுக் கொள்கிறார்.

நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டுகளைச் சேர்ந்தவர்களான சிறிய வணிகர்கள், கடைக்காரர்கள், பொதுவாகப் பரந்த வணிகத் தொடர்புகளின்றிக் குறுகிய அளவில் வணிகம் செய்வோர், கைவினைஞர்கள், விவசாயிகள் இவர்கள் அனைவரும் படிப்படியாகத் தாழ்வுற்றுப் பாட்டாளி வர்க்கத்தில் கலந்துவிடுகின்றனர். அவர்களின் சொற்ப மூலதனம் நவீனத் தொழில்துறையின் வீச்சுக்கு ஈடுகொடுத்துத் தொழில்நடத்தப் போதாமல், பெரிய முதலாளிகளுடனான போட்டியில் மூழ்கிப் போய்விடுவது ஒருபாதிக் காரணமாகும். அவர்களுடைய தனிச்சிறப்பான திறைமைகள் புதிய உற்பத்தி முறைகளால் மதிப்பற்றதாகி விடுவது மறுபாதிக் காரணமாகும். இவ்வாறாக, மக்கள் தொகையின் அனைத்து வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் சேர்கின்றனர்.

பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாக, இந்தப் போராட்டத்தைத் தனித்தனித் தொழிலாளர்களும், அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும், தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக நடத்துகின்றனர். தொழிலாளர்கள், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு எதிராகத் தங்களின் தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. உற்பத்திக் கருவிகளை எதிர்த்தே தாக்குதல் தொடுக்கின்றனர். அவர்களின் உழைப்போடு போட்டியிடும் இறக்குமதிப் பொருள்களை அவர்கள் அழிக்கின்றனர்; எந்திரங்களைச் சுக்கு நூறாக உடைத்தெறிகின்றனர்; தொழிற்சாலைகளைத் தீவைத்துக் கொளுத்துகின்றனர்; மறைந்துபோய்விட்ட, மத்திய காலத்துத் தொழிலாளியின் அந்தஸ்தைப் பலாத்காரத்தின் மூலம் மீட்டமைக்க முயல்கின்றனர்.

இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள், இன்னமும் நாடு முழுமையும் சிதறிக் கிடக்கின்ற, தமக்குள்ளே ஒத்திசைவில்லாத ஒரு கூட்டமாகவே உள்ளனர். அவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பரப் போட்டியால் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் எங்காவது மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புகளில் ஒன்றுபட்டுள்ளார்கள் எனில், அந்த ஒற்றுமை இன்னமும்கூட அவர்கள் தாமாக முன்வந்து ஒன்றுபட்டதன் விளைவாக இல்லாமல், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்ட விளைவாகவே உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த அரசியல் லட்சியங்களை அடையும் பொருட்டு, ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தைக் களத்தில் இறக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. மேலும், சிறிது காலத்துக்கு அவ்வாறு செய்யவும் அதனால் முடிகிறது. எனவே, இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் அவர்களின் பகைவர்களோடு போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மிச்சமீதங்கள், நிலவுடைமையாளர்கள், தொழில்துறை சாராத முதலாளிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரை எதிர்த்துத்தான் போராடுகின்றனர். இவ்வாறாக, வரலாற்று ரீதியான இயக்கம் முழுமையும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் குவிந்துள்ளது; இவ்வகையில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்துக்கே வெற்றியாக அமைகிறது.

ஆனால் தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றி, பெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறது; அதன் வலிமை வளர்கிறது; அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்து, அனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும், வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் தொழிலாளர்களின் கூலிகளை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைத் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக்கொள்கின்றனர். இங்கும் அங்கும் [சில இடங்களில்] இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.

அவ்வப்போது சில வேளைகளில் தொழிலாளர்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனாலும் அது தற்காலிக வெற்றியே. அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள இவை உதவுகின்றன. யாவும் ஒரே தன்மை கொண்ட, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்களை வர்க்கங்களுக்கு இடையேயான ஒரே தேசியப் போராட்டமாக மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே ஆகும். மத்திய காலத்து நகரத்தார், அவர்களுடைய படுமோசமான சாலைகளின் துணைகொண்டு, எந்த ஒற்றுமையைச் சாதிக்கப் பலநூறு ஆண்டுகள் தேவைப்பட்டனவோ அந்த ஒற்றுமையை, நவீனப் பாட்டாளிகள் ரயில்பாதைகளின் துணைகொண்டு ஒருசில ஆண்டுகளிலேயே சாதித்துவிட்டனர்.

தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும் ஆக்கிக் கொள்ளும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பானது, தொழிலாளர்களுக்கு உள்ளேயே நிகழும் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. எனினும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியிலேயே நிலவும் பிளவுகளைப் பயன்படுத்தித் தொழிலாளர்களின் குறிப்பிட்ட நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கட்டாயப்படுத்துகிறது. இவ்வாறுதான் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலைநாள் மசோதா சட்டமாக்கப்பட்டது.

மொத்தமாகப் பார்க்குமிடத்து, பழைய சமுதாயத்தின் வர்க்கங்களுக்கு இடையே நிகழும் மோதல்கள், பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்குக்குப் பல வழிகளிலும் உதவுகின்றன. முதலாளித்துவ வர்க்கம் இடையறாத ஒரு போராட்டத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. முதலில் பிரபுக் குலத்துடன் போராட வேண்டியிருந்தது; அதன்பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் நலன்கள் தொழில்துறை முன்னேற்றத்துக்கு எதிராகிவிடும்போது, அந்தப் பகுதிகளுடன் போராட வேண்டியுள்ளது; எந்தக் காலத்திலும் அன்னிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடன் அது போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கவும், அதன் உதவியை நாடவும், அப்படியே அதனை அரசியல் அரங்குக்கு இழுத்துவரவும் வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கமே, பாட்டாளி வர்க்கத்துக்குத் தன் சொந்த அரசியல் கல்வியின் கூறுகளையும், பொதுக் கல்வியின் கூறுகளையும் வழங்குகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவத்தோடு போரிடுவதற்கான ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவமே வழங்குகிறது.

மேலும், நாம் ஏற்கெனவே அறிந்தபடி, தொழில்துறை முன்னேற்றத்தின் விளைவாக ஆளும் வர்க்கங்களில் பல பிரிவுகள் முழுமையாகப் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படுகின்றன. அல்லது, குறைந்தபட்சம் அவற்றின் வாழ்வாதார நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்தப் பிரிவுகளும் பாட்டாளி வர்க்கத்தின் ஞானோதயத்துக்கும் முன்னேற்றத்துக்குமான பல புத்தம் புதிய கூறுகளை வழங்குகின்றன.

இறுதியாக, வர்க்கப் போராட்டம் தீர்மானகரமான நிலையை நெருங்கும் நேரத்தில், ஆளும் வர்க்கத்தினுள்ளே, சொல்லப்போனால் பழைய சமுதாயம் முழுமையினுள்ளும், நடைபெறுகின்ற கரைந்துபோகும் நிகழ்வுப் போக்கானது, வெகு உக்கிரமான, பகிரங்கமான நிலையை எட்டுகிறது. ஆளும் வர்க்கத்தின் ஒரு சிறு பிரிவு தன்னைத் தனியே துண்டித்துக் கொண்டு, எதிர்காலத்தைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் புரட்சிகர வர்க்கத்துடன் சேர்ந்து கொள்கிறது. ஆக, முந்தைய காலகட்டத்தில், எவ்வாறு பிரபுக்களில் ஒரு பிரிவு முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சென்றதோ, அதேபோல இப்போது முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதி பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கிறது. அதிலும் குறிப்பாக முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளுள், வரலாற்று இயக்கத்தின் முழுப் பரிமாணத்தையும் தத்துவ ரீதியில் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தம்மை உயர்த்திக்கொண்ட ஒரு பிரிவினர் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கின்றனர்.

இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கமாகும். பிற வர்க்கங்கள் நவீனத் தொழில்துறையின் முன்னே சிதைவுற்று முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழில்துறையின் தனிச்சிறப்பான, சாரமான விளைபொருளாகும்.

அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினர், சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் அனைவரும், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாகத் தம் இருப்பை அழிவிலிருந்து காத்துக்கொள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். எனவே, இவர்கள் பழமைவாதிகளே அன்றிப் புரட்சிகரமானவர் அல்லர். மேலும் இவர்கள் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் செலுத்த முயல்வதால், இவர்கள் பிற்போக்காளரும் ஆவர். இவர்கள் ஏதோ தற்செயலாகப் புரட்சிகரமாக இருக்கிறார்கள் எனில், அவ்வாறு இருப்பதற்கு இவர்கள் பாட்டாளி வர்க்கமாக மாறிவிடும் தறுவாயில் உள்ளனர் என்பது மட்டுமே காரணம் ஆகும். இவ்வாறாக, இவர்கள் தமது நிகழ்கால நலன்களை அல்ல, எதிர்கால நலன்களையே பாதுகாத்துக் கொள்கின்றனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கருத்துநிலையில் தம்மை வைத்துக்கொள்ளும் பொருட்டு, தமது சொந்தக் கருத்துநிலையையே கைவிடுகின்றனர்.

பழைய சமுதாயத்தின் மிகமிக அடிமட்ட அடுக்குகளிலிருந்து தூக்கி எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கழிவாகிய ”ஆபத்தான வர்க்கம்” இங்குமங்கும் ஒருசில இடங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சியால் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். எனினும், அந்த வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள், பிற்போக்குச் சூழ்ச்சியின் லஞ்சம் பெற்ற கைக்கூலியாகச் செயலாற்றவே அதனைப் பெரிதும் தயார் செய்கின்றன.

ஏற்கெனவே பாட்டாளி வர்க்க வாழ்க்கை நிலைமைகளில், பழைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை நிலைமைகள் அனேகமாகப் புதையுண்டு போயின. பாட்டாளிக்குச் சொத்துக் கிடையாது; மனைவி மக்களிடம் அவனுக்குள்ள உறவுக்கும், முதலாளித்துவக் குடும்ப உறவுகளுக்கும் இடையே பொதுவான கூறுகள் எதுவும் இனிமேல் இல்லை. ஃபிரான்சில் இருப்பதுபோலவே இங்கிலாந்திலும், ஜெர்மனியில் இருப்பதுபோலவே அமெரிக்காவிலும், நவீனத் தொழில்துறை உழைப்பும், மூலதனத்துக்குக் கீழ்ப்படும் நவீன கால அடிமைத்தனமும், பாட்டாளியிடமிருந்து தேசியப் பண்பின் அனைத்து அடையாளங்களையும் துடைத்தெறிந்துவிட்டது. சட்டம், ஒழுக்கநெறி, மதம் என்றெல்லாம் பாட்டாளிக்கு எத்தனை முதலாளித்துவத் தப்பெண்ணங்கள் உள்ளனவோ அத்தனை முதலாளித்துவ நலன்கள் அவற்றின் பின்னால் பதுங்கி மறைந்து கொண்டுள்ளன.

மேலாதிக்கம் பெற்ற முந்தைய வர்க்கங்கள் யாவும், [உற்பத்திப் பொருள்களைக்] கையகப்படுத்தலில் தம்முடைய நிபந்தனைகளுக்கு ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் உட்படுத்துவதன் மூலம், அவை ஏற்கெனவே பெற்றிருந்த அந்தஸ்துக்கு அரண் அமைத்துக்கொள்ள முற்பட்டன. ஆனால் பாட்டாளிகள் அவர்களுக்கே உரிய முந்தைய கையகப்படுத்தும் முறையையும், அதன்மூலம் முந்தைய பிற கையகப்படுத்தும் முறைகள் அனைத்தையும் ஒழித்திடாமல், சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளுக்கு எஜமானர்கள் ஆக முடியாது. அவர்கள் பாதுகாத்து வைக்கவும் அரணமைத்துக் கொள்ளவும் சொந்தமாக ஏதும் பெற்றிருக்கவில்லை. தனிநபர் சொத்துடைமைக்கான முந்தைய பாதுகாப்புகளையும், அதன் காப்புறுதிகளையும் தகர்த்தெறிவதே பாட்டாளிகளின் லட்சியப் பணியாகும்.

இதற்குமுன் நடைபெற்ற வரலாற்று ரீதியான இயக்கங்கள் அனைத்தும் சிறுபான்மையினரின் இயக்கங்களாகவோ, அல்லது சிறுபான்மையினரின் நலனுக்கான இயக்கங்களாகவோ இருந்தன. ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கமோ மிகப் பெரும்பான்மையினர் பங்குபெறும், மிகப் பெரும்பான்மையினரின் நலனுக்காக நடக்கும், தன்னுணர்வுடன் கூடிய சுயேச்சையான இயக்கமாகும். இன்றைய நமது சமுதாயத்தின் மிகக் கீழான அடுக்காகவுள்ள பாட்டாளி வர்க்கம், அதிகாரப்பூர்வ சமுதாயத்தின் மேலமைந்துள்ள அடுக்குகள் முழுவதையும் விண்ணில் தூக்கி வீசி எறியாமல், தன்னால் [சிறிதும்] அசைய முடியாது; தன்னை உயர்த்திக் கொள்ளவும் முடியாது.

முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும், வடிவத்திலேனும், முதலில் அதுவொரு தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்தாக வேண்டும்.

பாட்டாளி வர்க்க வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களைச் சித்தரிக்கும்போது, தற்போதைய சமுதாயத்தின் உள்ளேயே ஏறக்குறையத் திரைமறைவாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை, அது வெளிப்படையான புரட்சியாக வெடிக்கும் கட்டம்வரையில் - முதலாளித்துவ வர்க்கம் பலவந்தமாக வீழ்த்தப்பட்டு, பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் கட்டம்வரையில் - நாங்கள் வரைந்து காட்டியுள்ளோம்.

இதுநாள்வரையில் ஒவ்வொரு சமூக அமைப்புமுறையும், நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையையே அடித்தளமாகக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு வர்க்கத்தை ஒடுக்க வேண்டுமானால், அந்த வர்க்கம் குறைந்தபட்சம் அதன் அடிமை நிலையிலாவது தொடர்ந்து நீடித்திருப்பதற்குரிய சில நிபந்தனைகளை அதற்கு உத்தரவாதம் செய்திட வேண்டும். நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகார ஒடுக்குமுறையின்கீழ், குட்டி முதலாளித்துவப் பிரிவினர் ஒருவாறு முதலாளியாக வளர முடிந்தது. அதுபோலவே, பண்ணையடிமை முறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை, நகரத்தார் சமூக உறுப்பினனாகத் தன்னை உயர்த்திக் கொண்டான். இதற்கு மாறாக, [இன்றைய] நவீன காலத்துத் தொழிலாளி, தொழில்துறையின் முன்னேற்றத்தோடு கூடவே தானும் முன்னேறுவதற்குப் பதிலாக, தன் சொந்த வர்க்கம் நிலவுதற்குரிய [வாழ்வாதார] நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து போகிறான். அவன் பரம ஏழை ஆகிறான். பரம ஏழ்மை மக்கள் தொகையையும் செல்வத்தையும்விட அதிவேகமாக வளர்கிறது. இங்குதான் ஒன்று தெளிவாகிறது – முதலாளித்துவ வர்க்கம் இனிமேலும் சமுதாயத்தில் ஆளும் வர்க்கமாக நீடிக்கவும், தான் நிலவுதற்குரிய நிலைமைகளை அனைத்துக்கும் மேலான சட்டவிதியாகச் சமுதாயத்தின் மீது திணிக்கவும் தகுதியற்றது. முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் செலுத்தவும் தகுதியற்றது. ஏனெனில், அதன் அடிமை, அவனுடைய அடிமை நிலையிலேயே தொடர்ந்து வாழ்வதற்குக்கூட வகைசெய்ய அதற்கு வக்கில்லை. மேலும், அதன் அடிமையிடமிருந்து தான் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்குப் பதிலாக, அந்த அடிமைக்கு வாழ்வாதாரங்களை வழங்கியாக வேண்டிய நிலைக்கு, அவன் தாழ்ந்து போவதை அதனால் தடுக்க முடியவில்லை என்பதும் காரணமாகும். சமுதாயம் இனிமேலும் இந்த முதலாளித்துவ வர்க்கத்தின்கீழ் வாழ முடியாது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கம் நிலவுவது இனிமேலும் சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இன்றியமையாத நிபந்தனை, மூலதனம் உருவாதலும் வளர்ந்து பெருகுதலும் ஆகும். மூலதனத்துக்கு இன்றியமையாத நிபந்தனை கூலி உழைப்பாகும். கூலி உழைப்போ முற்றிலும் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை மட்டுமே சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அனிச்சையாக வளர்த்தெடுக்கும் தொழில்துறையின் முன்னேற்றமானது, அத்தகைய போட்டியின் காரணமாக தொழிலாளர்களிடையே ஏற்படும் தனிமைப்பாட்டை, அவர்கள் [சங்க அமைப்பில்] ஒன்றுசேர்தலின் காரணமாக ஏற்படும் புரட்சிகரப் பிணைப்பின் மூலம் நீக்குகிறது. எனவே, நவீனத் தொழில்துறையின் வளர்ச்சியானது, எந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம், பொருள்களை உற்பத்தி செய்தும் கையகப்படுத்தியும் வருகிறதோ, அந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.

RSS காலிகள் அட்டூழியம்: கல்லூரி முதல்வர் மேல் கொலைவெறித் தாக்குதல்!!

காலித்தனம் என்பது இயற்கையாக உருவாவதல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்ட ரீதியில் பழக்கப்படுத்தப்பட்டு ஏற்படுவது. பார்ப்பன பயங்கரவாதிகள் குஜராத்தில் ஆடிய ரத்த வெறியாட்டம் அப்போது சட்டென்று தொடங்கிய ஒன்றல்ல, மாறாக பல ஆண்டுகளாக தமது ஆக்டோபஸ் கரங்களில் ஒன்றான வனவாசி கல்யான் ஆஸ்ரம் என்னும் அமைப்பு மூலம் பழங்குடியினர் மத்தியில் ஆயிரக்கணக்கில் ஓராசிரியர்பள்ளிகள் நடத்தி, கொஞ்சம் கொஞ்சமாக இந்து வெறியை, ரத்த பசியை தூண்டி விட்டு பிறகு அதன் மூலம் ஏற்பட்ட அறுவடை தான் சிலஆயிரம் முசுலிம் மக்களின் உயிர்கள்!

முளைக்கும் போதே களையாக முளைக்க வைத்து விட வேண்டும் என்பதில் இந்த பார்ப்பன பயங்கரவாதிகள் மிக கவனமாக இருக்கிறார்கள். அப்படிமானவர்களை மயக்கி, அவர்களிடையேயும் தமது பயங்கரவாத செயல்களுக்கான ஆதரவு தளத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கவனமாக திட்டம் தீட்டி எம்.எஸ்.கோல்வால்கர் என்னும் நபரின் வழிகாட்டுதலோடு உருவாக்கப்பட்ட அமைப்பு தான் எ.பி.வி.பி என்னும் அகில பாரத வித்யார்த்திபரிசத் என்னும் அமைப்பாகும். நாடெங்கும் இருக்கும் பள்ளி கல்லூரிகளில் பரவும் விஷம் போல் இந்த அமைப்பு பரவி வருகிறது.

அவ்வப்போது ஆசிரியர்களை கொலை செய்வது, மானவிகளை மானபங்கப்படுத்துவது போன்ற செயல்களின் மூலம் தமது இருப்பை இவர்கள் காட்டிக் கொண்டே இருப்பார்கள். 2006ம் ஆண்டு உஜ்ஜைனி பல்கலைக்கழகத்தில் வைத்து ஹெச்.எஸ்.சபர்வால் என்ற பேராசிரியரைக் கொன்ற இந்த குரங்குக் கூட்டம் பிறகு 2007ம் ஆண்டு வி.சி.சொராஸ்யா என்னும் அன்றைய முதல்வரை ஹாக்கி மட்டையால் அடித்து கொலை வெறியாட்டத்தைநடத்தி முடித்தது. http://timesofindia.indiatimes.com/India/ABVP_at_it_again_beats_up_principal/rssarticleshow/2291639.cms

இதோ இந்த ஆண்டுக்கான தமது வன்முறைக் கணக்கை நேற்று அதே உஜ்ஜைனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆஷிஷ் மேத்தா என்பவரை தாக்கி படுகாயப்படுத்தியதன் மூலம் தொடங்கியிருக்கிறார்கள். பரீட்சையில் காப்பியடிக்க அனுமதி மறுத்ததே இந்த தாக்குதலுக்கு காரணம்!

இப்படி வளரும் இளம் தலைமுறையினருக்குள் ஊடுருவி படிக்கும் காலத்திலேயே எல்லாவித மொள்ளமாரித்தனத்தையும் மானவர்கள் மத்தியில் பழக்கப்படுத்துவதேதமது இலக்காகக் கொண்டு இவ்வமைப்பு செயல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. இவர்களை இவர்களை சல்லி வேர் வரைக்கும் விட்டு வைக்காமல் ஒழித்துக் கட்டுவது ஒன்றே நம் முன் இன்றைக்கு இருக்கும் முக்கிய கடமையாக இருக்கிறது.

இது பற்றி NDTVல் வந்த செய்தி -
Wednesday, January 9, 2008 (Ujjain)Remember the shocking murder of Professor Sabharwal in Ujjain? Now there is one more case of violence in a campus in Ujjain, once again involving activists of the ABVP, the BJP's student arm.

Two ABVP activists reportedly went up to the principal of a private college, and demanded that their friends be allowed to cheat in exams.

When they were denied that, they beat up 32-year-old Professor Ashish Mehta and are now missing. The incident happened at 4 pm and the principal got mild injuries.
When exams are going on in professional courses, the two ABVP activists Vimal Shastri and Bhanu Bhodoria entered the principal's office and told the principal that he should let their friends cheat during exams.

When principal refused, they threatened him with dire consequences and then slapped him and beat him up.

FIR has been registered, the accuseds are absconding.

http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080038161&ch=1/9/2008%2011:30:00%20PM

அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!


1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசி 70,000 மக்களைக் கொன்று குவித்ததுடன் இன்றுவரை அங்கே பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறக்கும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது அமெரிக்கா. அதற்கு 3 நாட்களுக்குப் பிறகு இன்னொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் தனது கொலைவெறியை அரங்கேற்றி 74,000 மக்களைக் கொன்று குவித்தது.

மனித குலத்தையே வேரறுக்கக் கூடிய இந்த அணு ஆயுதத்தை முதன்முதலில் மனிதன் மீது பிரயோகித்த பெருமையைத் தன்னுடைய தாக்கிக் கொண்டாலும், அந்த அணுசக்தியிலிருந்து பலன் பெற்று மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை அமெரிக்காவிடம் இல்லை. சோவியத் ரஷ்யாவில்தான் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1951 ல் இருந்தே இந்தியாவில் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும், அணு உலைகளை அமைத்து அணுசக்தியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்.

அப்போதிருந்தே உலக அளவில் அணுசக்தித் துறையில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. இன்றளவும் அதிவேக ஈனுலைகள் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. தோரியம் எனும் தனிமத்தைக் கொண்டு இயங்கக் கூடிய இந்த "அதிவேக ஈனுலைகள்" யுரேனியம் கொண்டு இயங்கும் மற்ற நாட்டு அணு உலைகளை விட 600 மடங்கு அதிக சக்தியைக் கொண்டது என்று முன்னாள் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி வேறெந்த நாட்டின் உதவியுமின்றி சொந்தநாட்டிலேயே தயாரித்து, இதுவரை இரண்டு முறை அணு குண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது இந்தியா.இவ்வாறு மின்சாரத் தேவைக்கான அணுசக்தி ஆராய்ச்சி தொடங்கி, பக்கத்து நாடுகளை மிரட்டி அணுகுண்டு வெடிப்பது வரை இந்தத் துறையில் சொந்தத் தொழில்நுட்பத்தையே இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது.

ரஷ்யாவின் உதவியுடன் கல்பாக்கத்திலும், அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரிலும் அணுமின் நிலையங்களை நிறுவினாலும் அவை முற்றிலும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகவே இருந்துள்ளன.
..ஆனால் இப்போது '123 ஒப்பந்தம்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆப்பறையும் விதத்தில் வந்துள்ளது.

இந்த ஒப்பந்ததின்படி அடுத்த 40 ஆண்டுகளுக்குத் இந்தியா அமெரிக்காவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும். அப்படி இறக்குமதி செய்யும் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும், அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. மீறி அணுகுண்டு தயாரித்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த யுரேனியத்தை நம்பி இந்தியா பல லட்சம் கோடி செலவில் அணு உலைகளை உருவாக்கியிருந்தாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அணுகுண்டு வெடிக்காவிட்டாலும் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்புத் தரவேண்டும்.

ஏற்கனவே இரண்டு முறை ஈரான் -க்கு எதிராக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களித்து உள்ளது.
இப்போது ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு தாக்குதல் தொடுக்குமானால் அப்போது இந்தியா கூலிப்படை அனுப்பி உதவ வேண்டும்.

அதேபோல மற்ற நாடுகள் அனுமதிக்காத 'நிமிட்ஸ்' போர்க் கப்பலை இந்தியக் கடலோரத்தில் இந்தியா அனுமதித்து உள்ளது. அந்த கப்பல் போர்க்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற கப்பல்களை தங்கு தடையின்றி வந்து போக அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது.
அணு ஆராய்ச்சியை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு, குறைந்த விலைக்கு நடத்தித் தர அமெரிக்கா கோருகிறது.அணு உலைகளை கண்காணிக்க நிபுணர்குழுவினை இந்தியாவுக்குள் வந்து போக அணுமதிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது..

இப்படிப்பட்ட நாசகார, மோசடியான ஒப்பந்தத்தை தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்ட யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் அமெரிக்க அடிமை நாயாய் சேவகம் செய்யும் மன்மோகன் சிங் இதனை ஏற்று கொண்டுவிட்டார். மக்களையே சந்திக்காமல், தேர்தலிலேயே நிற்காமல் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் உட்கார்ந்து கொண்டு இப்படி தாய்நாட்டை அமெரிக்காவுக்கு விலை பேசியுள்ளார்.

"நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். ஆனால் ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது. குறைந்த பட்சம் இது குறித்து விவாதம் செய்ய முடியாது." என்று மன்மோகன் சிங் கூறிகிறார்.

அமெரிக்க எஜமானன் போட்ட உத்தரவை இந்திய அடிமைகள் பரிசீலிப்பதா என்று இவர் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போது சிறிதளவேனும் தேசப்பற்றுடைய எவருக்கும் ரத்தம் கொதித்துப் போகும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு அணு குண்டு வெடிக்க முடியாது என்று கூறி இதனை எதிர்க்கிறது பா.ஜ.க. இந்த தேசவிரோத ஒப்பந்தம் நிறைவேறனுமா, வேண்டாமா என்று இவர்கள் கூறுவதில்லை. என்ன செய்ய முடியும், காங்கிரஸ் அல்சேஷன் என்றால் பா.ஜ.க டாபர்மேன் இல்லையா?
இந்த ஒப்பந்தத்தை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்ததே வாஜ்பாயிதான் என்று குட்டை உடைத்துவிட்டார் எம்.கே.நாராயணன் (இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அத்தோடு இவர்களின் குலைக்கும் சத்தம் ஓய்ந்துவிட்டது.

"ஒப்பந்ததை ரத்து செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிய போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து" மன்மோகன் சிங் "உங்களால் என்ன செய்ய முடியும், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.
எனது எஜமானனுக்குச் சேவை செய்ய முடியாத ஆட்சி இருந்தாலென்ன போனால் என்ன கருதுகிறார் போலும்.

இந்தப் பிரதமர் பதவி அமெரிக்கா எனக்குப் போட்ட பிச்சை, 123 ஒப்பந்தத்திற்காக அதனை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கூறிய உடன் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ.க வின் மதவெறி நினைவுக்கு வர ஆட்சியையெல்லாம் கவிழ்க்க மாட்டோம் சும்மா இது பற்றி விவாதம் மட்டும் பண்ணினால் போதும், ஓட்டெடுப்பு கூட வேண்டாம் என்று இறங்கிவந்தார்கள்.

ஆனால் மன்மோகன் சிங்கோ தான் பிடித்த அமெரிக்க உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு சிறிது கூட இறங்காமல் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என விவாதம்கூட செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
உடனே 'தோழர்கள்' கடுமையான விளைவுகள் நேரிடும் என்று திரும்பவும் லாவணிபாட ஆரம்பித்து விட்டனர்.

கடந்த 100 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலும் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய மிருகம் அமெரிக்கா. அதன் காலடியில் நமது நாட்டை,அதன் இறையாண்மையை, நமது எதிர்காலத்தை, மற்ற நாடுகளுடன் நமது உறவை அடமானம் வைக்கும் அடிமைச்சாசனம்தான் 123 ஒப்பந்தம்.
இந்த உண்மை எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்.

நன்றி:கோபா
நன்றி: http://123-agreement.blogspot.com/2007/09/123.html

சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்!!

இந்த பாடலை எப்போது கேட்டாலும் நெஞ்சின் ஆழத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத வலியை உண்டாக்கும்.

sollaatha soogam.w...






உணர்வூட்டும் வேறு பாடல்களுக்கு http://www.tamilcircle.net/ தளம் செல்லவும்.

பாஸிஸ்டுகளின் வெற்றி !!

சமீபத்தில் 1933 மார்ச் 6ம் தேதி ஹிட்லரின் நாஜி கட்சி தேர்தலில் 43.9 சதவீத வாக்குகள் பெற்று வென்றது. தேர்தலுக்கு சில தினங்கள் முன்புரேய்ச்ஸ்டெக் கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டு அந்தப் பழி கம்யூனிஸ்டுகள் மேல் சுமத்தப்பட்டது. வெறியூட்டும் பேச்சுக்களால் மக்களைசுயநினைவற்றவர்களாக மாற்றி நாஜிக் கட்சி இந்த வெற்றியை அடைந்தது. நாஜிக்கள் அதிகாரத்தில் இருந்த பன்னிரண்டு ஆண்டுகளும்அவர்கள் மக்களின் ஆதரவை பெற்றிருந்தனர். இந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் மக்களிடையே கம்யூனிசத்தின் மேலானஅச்சத்தை பூதாகரமாக ஊதிப் பருக்க வைத்திருந்தனர்.

நாஜிக்கள் மக்களிடையே அச்சத்தின் அரசியலை நடத்தி அதன் மூலம் அவர்களிடையே கண்மூடித்தனமான வெறியை ஏற்றி அதன் மூலமேதமக்கான ஆதரவு தளத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தனர். கோயபல்ஸ் போன்ற தேர்ந்த பொய்யர்கள் மிகத் திறம்பட பொய்ப்பிரச்சாரத்தின்மூலம் மக்களை ஆடுமாடுகள் போல தமக்குப் பின் அணி திரள வைத்தனர். ஆரிய இனத் தூய்மை, யூத இன எதிர்ப்பு, கம்யூனிஸ எதிர்ப்புபோன்ற மக்கள் விரோத தளத்தின் மேலேயே நாஜிக்களின் சித்தாந்தங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தது.

பொதுவாக இது போன்ற பாஸிஸ்டுகள் ஒரு நார்ஸிஸ்டைப் போல தம்மையே ரசித்துக் கொள்ளும் மனநோய் கொண்டவர்கள். ஆங்கிலத்தில்பர்சனாலிடி கல்ட் என்பார்கள்; அதாவது தங்கள் தலைமையை ஈடுஇனையற்றது, கடவுளுக்கும் மேலானது, என்பது போல் ஊதிப்பெறுக்கிகாட்டுவதில் வல்லவர்கள் ( larger than life image). தமது குறுகிய வெற்றியை நிலையானது என்று நம்பும் மனநோயாளிகள் இவர்கள். கும்பல்சார் நீதியே இவர்கள் நம்பும் நீதியாகும். இது போன்ற பாஸிஸ்டுகளின் வீழ்ச்சியானது எந்தளவுக்கு கொடுரமாக இருக்கும் என்பது ஹிட்லரின்வீழ்ச்சியே நமக்குக் காட்டுகிறது.

பாஸிஸ்டுகள் தமது அரசியல் எதிரிகளை தேசத்துக்கே எதிரிகள் என்பது போல உருவகப்படுத்தி தேசிய வெறியை தூண்டி விடுவதை ஒரு முக்கியமானதந்திரமாகக் கொண்டிருப்பார்கள். யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் ஜெர்மானியின் விரோதிகள் என்பது போல சித்தரிப்பதில் ஹிட்லர் குறுகிய காலவெற்றியை பெற்றிருந்தான்.

நாஜிக்கள் பின்பற்றிய அதே வழிமுறைகளைத் தான் ஒரு மயிரளவும் பிசகாமல் பின்பற்றுகிறது இங்கேயுள்ள இந்துத்துவ பார்ப்பனிய பாஸிஸ்ட்கும்பல். இதில் அவர்களுக்கு அவ்வப்போது வெற்றியும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் வரலாற்றில் பாஸிஸத்துக்கு ஏற்பட்ட கதியை;அதற்கு ஏற்பட்ட முடிவை இவர்கள் சந்திக்கப்போகும் நாள் விரைவில் வந்தே தீரும். அன்று ஹிட்லரின் முதுகெலும்பை முறித்து அவனதுசித்தாந்தத்தை மரணக் குழிக்குள் அனுப்பியவரின் சீடர்கள் இந்திய ஹிட்லராக உருவெடுத்து வரும் மோடிக்கான மரணக்குழியை தோண்டுவார்கள்.

குஜராத் தேர்தல் நமக்கு நிறைய பாடங்களை போதிக்கிறது. ஹிட்லருக்கு எதிரி யூதர்களும் கம்யூனிஸ்டுகளும்; மோடி தனக்கு எதிரிகளாகஇஸ்லாமியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் முன்னிருத்துகிறான். ஹிட்லர் எப்படி தனது அரசியல் எதிரிகளை ஜெர்மானியின் எதிரிகளாகவேசித்தரித்தானோ அதே போல் மோடியும் இஸ்லாமியர்களை இந்தியாவின் எதிரிகளாக சித்தரிக்கிறான். தேர்தல் மேடைகளில் முஷாரஃபை நோக்கிவாய்சவடால்களை வீசி இங்குள்ள முஸ்லிம்களும் முஷாரஃபும் ஒன்று தான் என்பதாக பெரும்பான்மை “இந்துக்கள்” மனதில் பதிய வைக்கிறான்.நாஜிக்கள் நடத்திய அதே அரசியல் தான் மோடியினதும் - அச்சத்தின் அரசியல்!!

ஹிட்லரைப் போலவே மோடியின் அடிப்பொடிகள் இவனை ஒரு பிதாமகனாக சித்தரிக்கிறார்கள். தேர்தல் கூட்டமெங்கும் மோடி கவர்ச்சியாகசிரிப்பது போன்ற முகமூடிகளை தொண்டர்கள் அணிந்து வலம் வருகிறார்கள். ஹிட்லரிடம் ஒரு கோயபல்ஸ் தான் இருந்தான் ஆனால் மோடியைச்சுற்றி இருப்பவர்களெல்லாம் கோயபல்ஸையும் விஞ்சும் வாய் வீரர்களாய் இருக்கிறார்கள். தெகல்காவினால் பச்சையாக அம்பலப்பட்ட பின்னும்எந்த வித வெட்கமோ கூச்சமோ இன்றி அந்தக் கொலைகளை தொலைக்காட்சி காமெராக்கள் முன்னே நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ரேய்ச்ஸ்டெக் கட்டிட எரிப்பின் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் சுமத்திய ஹிட்லரைப்போலவே கோத்ரா ரயில் எரிப்பை முஸ்லிம்களை கொடூரமானவர்களாக காட்ட மோடி பயன்படுத்திக் கொண்டான். அந்த சம்பவங்களுக்குப் பின் ஹிட்லரைப் போலவே மிகத் தெளிவாக திட்டமிட்டு ஒரு இஸ்லாமிய இனவொழிப்பை நடத்திக் காட்டினான் மோடி. கொலைகளை ஜெர்மானிய பெருமை - ஆரியப் பெருமை என்னும் போர்வைக்குள் ஒளித்த ஹிட்லரைப் போலவே மோடியும் குஜராத்தி அஸ்மிதாவுக்குள் ஒளிக்கிறான். குஜராத்தி அஸ்மிதா என்னும் ஒளிவட்டத்துக்குள் சோராபுத்தின் சேக் போன்ற அப்பாவி முஸ்லிம் விட்டில்களின் ஆவிகள் ஏராளமாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது.

மோடிக்கு எதிராய் குஜராத்தில் “அரசியல்” செய்யும் காங்கிரஸோ ஓனாயின் முன்னே நிற்கும் புடுக்கறுந்த சொறிநாய் போல கூனிக்குறுகிநிற்கிறது. மோடியின் அராஜக அரசியலைப் பற்றி முனகும் அளவுக்குக் கூட தெம்பில்லாமல் குரல்வளை அறுந்த பன்றியைப் போல தேம்பிக் கொண்டிருக்கிறதுகாங்கிரஸ். ஒருவேளை இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வென்றிருந்தால் கூட அது இந்துத்துவத்தின் தோல்வியாய் இருந்திருக்காது. இது பற்றிமுன்பு கார்க்கி பக்கங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன் நாம் எழுதிய கட்டுரையின் சுட்டி இங்கே.

ஆனால் வரலாறு ஹிட்லர்களை எப்படி சந்தித்தது என்பது நம் முன் ஒரு பாடமாக இன்றும் நிற்கிறது. அன்று செம்படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுதற்கொலை செய்து கொண்ட ஹிட்லரும் மரணக் குழிக்குள் நாஜிக்கள் அமிழ்த்தப்பட்ட சம்பவங்களும் நமக்கு நம்பிக்கையளிப்பதாய் இருக்கிறது.இங்கும் பார்ப்பன பாஸிஸத்தை முறியடிக்கப்போகிறவர்கள் தோழர் ஸ்டாலினின் சீடர்களான கம்யூனிஸ புரட்சியாளர்கள் தாம்; நக்சல்பாரி அரசியலேஇந்துத்துவ கொடூரத்திற்கான சரியான தீர்ப்பை வரலாற்றில் எழுதப்போகிறது.

அது வரையில் மோடியின் வெற்றியென்னும் சிற்றின்பத்தால் இங்கே தமிழ் வலைத்தளங்களில் துடிக்கும் பூனூல்களுக்கு சொல்லிக் கொள்வது - அடங்குங்கடா…We are coming!!

யார் இந்த ஸ்டாலின்

ஸ்டாலின் தனது பாடசாலை வாழ்க்கையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் கண்டு அதைத் துடைக்க, தனது 16 வது வயதில் அதாவது 1895 இல் கம்யூனிஸ் கட்சியுடனான உறவைத் தொடங்குகின்றார். 1890 களின் இறுதியில் பல போராட்டத்தை நடத்தியதுடன், கட்சி வாழ்வை தொடங்கிவிடுகின்றார். கட்சி வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு சென்ற மென்ஷிவிக்குகள், போராட்ட நெருக்கடியில் கட்சிக் கலைப்பு வாதத்தை முன்வைத்து ஓடுகாலிகள், நடுநிலை சந்தர்ப்பவாதிகள், பலர் பலவிதத்தில் நீண்ட விடாமுயற்சியான நெருக்கடியான வர்க்க போராட்டத்தை கைவிட்டுச் சென்ற எல்லா நிலையிலும், ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை முன்நிலைப்படுத்தினார், அதற்காக போராடினார், அதைப் பாதுகாத்து நின்றார். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அவர் இரும்பு மனிதனாக இருந்ததால், அவரை லெனின் இரும்பு என்ற பெயரால் ஸ்டாலின் என்று அழைத்தார். பாட்டாளி வர்க்க, வர்க்கப் போராட்டத்தை உறுதியாக நடத்திய வரலாற்றில், அவர் ஆறு முறை தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து பலமுறை புரட்சியின் கடமையை முன்னெடுக்க தப்பியே வந்தார்.

1912 ம் ஆண்டு போல்ஷிவிக் கட்சி பிராக்கில் கூடிய போது, மென்ஷிவிக்குகளை கட்சியில் இருந்து முற்றாக வெளியேற்றியதுடன், லெனின் தலைமையிலான கட்சி தனது சுயேட்சையான பாட்டாளி வர்க்க புரட்சிகரத் தன்மையை ஸ்தாபன வடிவில் பகிரங்கமாக அறிவித்தனர். இந்த காங்கிரஸ் ஸ்டாலின் சிறையில் இருந்த போதும், ஸ்ராலினை மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்ததுடன், லெனின் ஆலோசனைப் படி நாட்டில் நடைமுறை வழிகாட்டும் தலைமை உறுப்பு ஒன்றை உருவாக்கியதுடன், அதன் தலைவராக அதற்கு தகுதியான ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். நாட்டின் புரட்சிகர அமைப்பாக்கல் மற்றும் அனைத்து வர்க்கப் போராட்டத்தையும், நேரடியாக கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், 1912 இல் இருந்தே ஸ்டாலின் கட்சிக்கு வழிகாட்ட தொடங்கிவிட்டார். 1917 போல்ஷிவிக் புரட்சியில் லெனின் பங்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேயளவுக்கு லெனினை முக்கியத்துவப் படுத்திய புரட்சியை முன்னெடுக்கும் நடைமுறைத் தலைமையை ஸ்டாலின் வழங்கினார். லெனின் கோட்பாட்டு தலைமை புரட்சியில் எவ்வளவுக்கு முக்கியமாக நடைமுறை சார்ந்து வழிகாட்டலுக்கு உள்ளாகியதோ, அதேபோல் ஸ்டாலின் நடைமுறைத் தலைமை புரட்சியை முன்னெடுத்த அமைப்பை உருவாக்குவதில் கோட்பாட்டு வழிகாட்டலை ஒருங்கிணைத்தது. இந்த இரு தலைமையும் ஒரு சேர நிகழ்ந்த வரலாற்றில் தான் சோசலிச புரட்சி வெற்றி பெற்றது. இவ் இரண்டும் இன்றி சோவியத் புரட்சி என்பது கற்பனையானது. இரண்டு துறை சார்ந்த முன்னணி பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், தத்தம் பணியில் வெற்றிகரமாக இணைந்து வழிகாட்டிய வரலாறு தான், சோவியத் புரட்சியை நடத்தியது. இந்தளவுக்கு வேறு எந்த தலைவரும் புரட்சியை முன்னெடுக்கும் தலைமைப் பொறுப்பை, பல்வேறு நெருக்கடிகளில் கொண்டிருக்கவில்லை. நாட்டுக்கு வெளியில் இருந்த லெனின் வழங்கிய கோட்பாட்டு தலைமையும், நாட்டுக்குள் ஸ்டாலின் வழங்கிய நடைமுறை அமைப்பாக்கல் தலைமையும், ஒன்றிணைந்த புரட்சி தான் சோவியத் புரட்சியாகும்.

ஸ்டாலின் திடீரென அதிகாரத்தை கைப்பற்றினான் என்பது எல்லாம் இடது வேடம் போட்டவர்களின் வெற்று அவதூறுகளாகும.;; ஸ்டாலின் நீண்ட அனுபவம் கொண்ட, போராட்ட தலைவனாக, நெருக்கடிகளில் முன் மாதிரி போல்ஷிவிக்காக போராடிய முன்னணி தலைவராக திகழ்ந்தமையால், 1912 லேயே மத்திய குழுவுக்கு தெரிவு செய்ததுடன், நாட்டின் நடைமுறை போராட்டத்துக்கான தலைமைப் பொறுப்பை லெனினின் முன்மொழிவுடன், 1912 லேயே ஏற்றுக் கொண்டு போல்ஷிவிக் தலைவரானார். இந்த தலைமைப் பொறுப்பை சதிகள் மூலமல்ல, பாட்டாளி வர்க்க போராட்டத் தலைவனாக நடைமுறையில் இருந்தமையால், அவர் சிறையில் இருந்த போதும் கட்சி அவரிடம் தனாகவே ஒப்படைத்தது.

1917 இல் நடந்த முதல் புரட்சியைத் தொடர்ந்து, யூன் மாதம் மென்சுவிக்குகள் ஆதிக்கம் வகித்த ரஷ்ய சோவியத்தின் முதல் காங்கிரசின் மத்திய நிர்வாக குழுவுக்கு, ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டதன் மூலம், ஒரு தலைவராகவே இருந்தார். 1917 இல் பெப்ரவரி புரட்சியை நடத்தியவர்கள் போல்சவிக்குகளை கைது செய்து, லெனினை கொன்று விட அவதூறுகளை பொலிந்த போது, டிராட்ஸ்கியும், காமனேவும் சிறைப்பட்டு நியாயம் கோரி வழக்காட வேண்டும் என்றே முன்மொழிந்தனர். ஸ்டாலின் அதை நிராகரித்ததுடன், லெனினின் பாதுகாப்பை தானே பொறுப்பெடுத்தார். ஐரோப்பாவில் புரட்சி நடைபெறாமால் பாட்டாளி வர்க்க புரட்சியா? என்ற கேள்வியுடன் டிராட்ஸ்கி, ருசியாவில் சோஷலிஸத்தை சாதிக்க முடியாது என்று புரட்சியை எதிர்த்த போது, ஸ்டாலின் ~~சோஷலிஸத்துக்குப் பாதை வகுக்கும் தேசமாக ரஷ்யா இருக்கக் கூடுமென்பதை புறக்கணிக்க முடியாது.... ஐரோப்பா மட்டுமே வழிகாட்ட வேண்டுமென்ற பத்தாம் பசலிக் கருத்தைக் கைவிடவேண்டும். குருட்டுத்தனமான வறட்டு மார்க்சியமும் இருக்கின்றது. படைப்புத் தன்மை கொண்டு வளரும் மார்க்சியமும் இருக்கின்றது. இரண்டாவது வகையை ஆதரிக்கின்றேன். என்றார்.

ஐரோப்பா புரட்சியின்றி தொடரும் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறாது என்று கூறி, டிராட்ஸ்கி சோசலிசம் என்ற வர்க்கப் போராட்டத்தை எதிர்த்து முன்வைத்த வாதம் மற்றும் நடைமுறைகள், உண்மையில் முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்தை ஒரே தாவில் தாண்டிவிடக் கோரும் இடது தீவிரத்தின் உள்ளடக்கமாகும். அராஜக வாதம் எதை கோட்பாட்டில் முன்வைக்கின்றதோ, அதையே இது பின் பக்கத்தால் வைக்கின்றது. சோசலிச சமூகம் என்பது கம்யூனிசத்தை நோக்கிய, அடுத்த கட்ட வர்க்கப் போராட்ட தயாரிப்பு மற்றும் முன்னெடுப்பு காலம் என்பதை மறுப்பதில் இருந்தே, ~~தனிநாட்டு சோசலிசம் என்ற எதிர்ப்பின் பின் உள்ள அரசியல் உள்ளடக்கமாகும். பாட்டாளிகள் வர்க்கப் போராட்டம் மூலம் கைப்பற்றும் ஆட்சி மாற்றம், வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு வடிவ மாற்றம் மட்டுமே தான். இங்கு கம்யூனிசத்தை நோக்கிய போராட்டத்தை சோசலிச சமூகத்தில் கைவிடக் கோருவது, வர்க்கப் போராட்டத்தை பின்பக்க கதவால் இழுத்து தடுப்பதாகும்.

வர்க்கப் போராட்டத்தைப் பற்றி லெனினின் தெளிவான நிலைப்பாட்டைப் பார்ப்போம்;. ~~சுதந்திரம், சமத்துவம் என்ற முழக்கங்களால் மக்களை ஏமாற்றுவது பற்றிய உரைக்கு முன்னுரையில் ~~பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்கப் போராட்டத்தின் முடிவல்ல் ஆனால் புதிய வடிவங்களில் இதன் தொடர்ச்சியாகும். தோற்கடிக்கப்பட்ட ஆனால் துடைத்தொழிக்கப்படாத ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக, மறைத்து போகாத, எதிர்ப்பைத் தருவதை நிறுத்தாத, ஆனால் எதிர்ப்பை மேலும் ஆழப்படுத்தியுள்ள ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தை கரங்களில் எடுத்துக் கொண்ட பாட்டாளி வர்க்கத்தால் தொடுக்கப்படும் வர்க்கப் போராட்டமே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமாகும். என்றார் லெனின். ஆனால் இதை எதிர்ப்பதில் தான் இன்றைய எல்லா இடது முகமூடிகளும் சரி, அன்றைய ட்ராட்ஸ்கி மற்றும் புக்காரின் தங்கள் அரசியலை கட்டமைத்தனர், கட்டமைக்கின்றனர். இவர்கள் லெனின் காலத்தில் சந்தர்ப்பவாதமாக மூடிமறைத்தபடி இதைப்பற்றி வாய்திறந்து எதிர்க்கவில்லை. ஆனால் முடிமறைத்த வகையில் தமது ஆட்சியை நிறுவுவதன் மூலம், இதை மறுக்க முனைந்தனர். இதில் தோற்ற போது இதை எதிர்ப்பது ஒரு அரசியல் கொள்கை விளக்கமாகி அதுவே சதியாகியது.. ஆனால் ஸ்டாலின் இதை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்ததில் தான், அவர் மீதான அவதூறுகள் கட்டமைக்கப்பட்டன, கட்டமைக்கப்படுகின்றது.

1917 அக்டோபர் 23ம் தேதி கட்சியின் மத்தியக் கமிட்டி கூடி எடுத்த வரலாற்று புகழ்மிக்க புரட்சியை நடத்துவது பற்றிய முடிவில், ஆயுதம் ஏந்திய எழுச்சிக்கு தலைமை தாங்க அமைக்கப்பட்ட குழுவுக்கு தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இங்கு ஸ்டாலின் சதி செய்து புரட்சிக்கு தலைமை தாங்க வந்தவர் அல்ல. கட்சி தனது தலைவரை தெரிவு செய்வது இயல்பானது. இந்த பொறுப்புமிக்க நடைமுறை ஸ்தாபனப் பணியை செய்யும் தகுதி, ஸ்ராலினைத் தவிர வேறு எந்த மத்திய குழு உறுப்பினருக்கும் அன்று இருக்கவில்லை. ஆனால் இடதுசாரி பெயரில் எழுதுபவர்கள் இதைப் பற்றி வகை வகையாக, வண்ணம் வண்ணமாக எழுதுவது மட்டுமே, அவர்களின் மலட்டுப் பிழைப்பாக உள்ளது.

ஸ்டாலின் என்ற தலைவருக்கு 1919 நவம்பர் 27ம் திகதி லெனின் முன்மொழிந்த தீர்மானத்தின் படி, ஸ்ராலினுக்கு செங்கொடி பதக்கம் வழங்கப்பட்டது. இதே விருதை டிராட்ஸ்கியும் பெற்றார். டிராட்ஸ்கி செஞ்சேனை சார்ந்து பாதுகாப்பு மந்திரியாக இருந்த போதும், சோவியத் புரட்சியை பாதுகாக்க செஞ்சேனையை தலைமை தாங்கி, எதிரிகளை ஒழித்துக் கட்டிய பங்களிப்பு சார்ந்து வழங்கிய விருது, அதே கராணத்துக்காக ஏன் ஸ்ராலினுக்கு வழங்கப்பட்டது.

சோவியத்துக்கு ஆபத்து ஏற்பட்ட இடங்களில் எல்லாம், கட்சியின் விசேட வேண்டுகோள்களை நிறைவேற்றுவதில், ஸ்டாலின் முன்முயற்சியுடன் செஞ்சேனையை வழி நடத்திய திறமைமிக்க தளபதியாக திகழ்ந்த தனித்துவமான பணிக்காக வழங்கப்பட்டது. கட்சியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஸ்டாலின் பல போர்முனைகளில் பல வெற்றிகளை சாதித்ததன் மூலம், சோவியத்தை பாதுகாத்தார். ஸ்டாலின் கிராட்டில் (ஜாரீட்ஸின்) இருந்து தேவையான உணவை பெறவும், இராணுவ ரீதியாக அதை வெற்றி பெறவும் கட்சியின் வேண்டுகோளின் படி, அதை மீட்டு எடுத்தார். இந்த யுத்த பிரதேசத்தில் டிராட்ஸ்கி செஞ்சேனைக்கு தளபதியாக நியமித்த பழைய ஜார் மன்னனின் இராணுவ தளபதிகளை நீக்கி, புரட்சிகரமான செஞ்சேனை, புரட்சிகரமான தளபதிகளின் தலைமையில் அப்பகுதியை மீட்டு எடுத்தார்.

அடுத்த மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க யூக்குரேணுக்கு சென்று அப்பகுதியை மீட்டதுடன், கார்க்கோ, பேலோ ரஷ்யாவையும் மீட்டார். 1918 இல் கிழக்கு முனையில் ஏற்பட்ட ஆபத்தை எதிர் கொள்ள மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க அங்கு சென்று கிழக்கு போர்முனையை வென்றார். அங்கு இருந்து மீண்ட ஸ்டாலின் புதிய பொறுப்பாக அரசாங்கச் செயலாட்சி அமைச்சராக கட்சியால் நியமிக்கப்பட்டார். இது தொழிலாளர், விவசாயிகள் கண்காணிப்பு வாரியம்;. ஊழல், நாசவேலை, கையாலாகாத்தனம் போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்துவதில், ஸ்டாலினின் பங்கு கோரப்பட்டது.

1919 இல் மார்ச்சில் எதிரி பெத்ரோகிராதை கைப்பற்ற முன்னேறிய போது, ஸ்டாலினை கட்சி அங்கு அனுப்பியது. அங்கு அவர் மாபெரும் சாதனையை சாதித்து எதிரியை நொருக்கித் தள்ளினார். பின்பு எதிரி ஓரெல் நகரை பிடித்த பின்பு, மொஸ்கோவை நான்கு மணிநேரத்தில் அடையும் வகையில் எதிரி அருகில் நெருங்கி வந்த நிலையில், மொஸ்கோவில் முதலில் கால் வைப்பவனுக்கு 10 லட்சம் ரூபிள் பரிசு அளிக்கப்படும் என்ற நிலையில், லெனின் தெனீக்கின் - எதிர்ப்புப் போரில் சகல சக்திகளும் திரளட்டும் என்றார். 1919 இல் மத்திய கமிட்டி இந்த எதிர்ப்பு போருக்கு தலைமை தாங்க ஸ்டாலினை நியமித்தனர். ஸ்டாலின் இந்த பிரதேசத்தை பாதுகாக்க வைத்த திட்டத்தை, கட்சி அங்கிகரித்த நிலையில், இப்போரில் ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்றனர். 1920 இல் முற்றாக இப்பகுதி விடுவிக்கப்பட்டது.

போலிஷ் படை தாக்குதலை தொடுத்த போது, அங்கும் ஸ்டாலின் அனுப்பப்பட்டார். ஏகாதிபத்திய தலைமையில் விரங்கல் புதிய தாக்குதலை யூக்ரேனில் தொடங்கிய போது, மத்திய குழு பின் வரும் திர்மானத்தை எடுத்தது. ~~விரங்கல் வெற்றியடைந்து வருகின்றான். கூபான் பிரதேசத்தில் கவலைக்கிடமான நிலைமை. எனவே விரங்கல் எதிர்ப்புப் போரை மிகவும் முக்கியமானதாகவும் முற்றிலும் சுயேட்சையானதாகவும் கருத வேண்டும். ஒரு புரட்சி இராணுவக் குழுவை அமைத்துக் கொண்டு, விரங்கல் முனையில் முழு முயற்சியையும் ஈடுபடுத்துமாறு மத்தியக் கமிட்டி தோழர் ஸ்டாலினுக்கு கட்டளையிடுகின்றது இதை ஸ்டாலின் நிறைவேற்றியதன் மூலம், ஒரு இராணுவ தளபதியாக நிமிர்ந்து நின்றார்.

இந்த புரட்சிகர யுத்தத்தில் ஒரு செஞ்சேனை தளபதியாக, தலைவனாக ஸ்டாலின் தனித்துவமான பணியை, லெனினால் முன்மொழியப்பட்டு மத்திய குழு அங்கீகரித்து வழங்கிய பதக்க அறிக்கையில் பேராபத்தான நேரத்தில் நானா பக்கங்களிலும் விரோதிகளின் வளையத்தால் சூழப்பட்டிருந்த பொழுது.... போராட்டப் பொறுப்புக்குத் தலைமைக் குழுவால் நியமிக்கப்பட்ட ஜே.வி.ஸ்டாலின், தன் சக்தியாலும் களைப்பறியாத உழைப்பாலும், தடுமாறிய செம்படைகளை திரட்டுவதில் வெற்றி கண்டார். அவரே போர் முனைக்குச் சென்று, எதிரியின் நெருப்புக்கு முன் நின்றார். தன் சொந்த உதாரணத்தால், சோஷலிஸ்ட் புரட்சிக்காகப் போராடியவர்களுக்கு உத்வேகம் ஊட்டினார். இந்த தீர்மானத்தையே இன்று இடது வேடதாரிகள் திரித்து மறுக்கின்றனர். ஸ்டாலின் இரண்டாம் உலக யுத்தத்தில் ஒரு தளபதியாக இருந்தே இருக்க முடியாது என்கின்றனர். சோவியத் புரட்சியில் ஸ்டாலின் பயந்து ஒளித்துக் கிடந்ததாகவும், வீம்புக்கும், வம்புக்கும் யுத்த முனைக்கு சென்றதாகவும், பல விதமாக அவதூறுகளை கட்டியே பிழைப்பைச் செய்கின்றனர். ஆனால் லெனின் வழங்கிய கருத்தும், பரிசும் மார்க்சிய வரலாற்று ஆவணமாக சர்வதேசிய வழியாக உள்ளது என்பதை மறந்துவிடுகின்றனர்.

1922 மார்ச், ஏப்பிரலில் நடந்த பதினொராவது கட்சி காங்கிரசில், கட்சி பொதுக் காரியதரிசி பதவி ஒன்று உருவாக்கப்பட்டு, லெனின் பிரேரணைக்கு இணங்க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியை ஸ்டாலின் உருவாக்கி, அதில் அதிகாரத்தை குவித்து, கட்சி உறுப்பினர்களை தனது சார்பாக நியமித்ததாக, போலி இடதுசாரி பிழைப்புவாதிகள் பசப்புகின்றனர். போல்ஸ்விக் கட்சி வரலாற்றில் லெனினுக்கு பின்பு யாரும் ஸ்ராலினை தாண்டி கட்சித் தலைவராக உயர்ந்ததில்லை. நீண்ட கட்சி வரலாற்றில் லெனினுடன் அக்க பக்கமாக போராடியதுடன், நாட்டின் தலைமைப் பொறுப்பை ஸ்டாலினே மேற் கொண்டார். ஸ்டாலின், லெனின் மரணத்துக்கு முன்பே, அதாவது 1912 லேயே லெனின் முன்மொழிவுடன், கட்சியே ஸ்ராலினிடம் தலைமைப் பொறுப்பை கொடுத்திருந்தது. இதை எல்லாம் வரலாற்றில் புதைத்துவிட முயலும், இடதுசாரி வேசைத்தனம் வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றது.

1924 இல் லெனின் எழுதிய சக தலைவர்கள் பற்றி, நாம் பார்ப்பது அவசியமாகும். ஸ்டாலினுக்கும், டிராட்ஸ்கிக்கும் இடையில் இருந்து வரும் முரண்பாட்டை பற்றி லெனின் சரியாக மதிப்பிடுகின்றார். இங்கு முரண்பாட்டில் இருவரின் பங்கையும் காண்பதுடன், இரண்டு தலைவர்களின் சிறப்பு மற்றும் குறைகளையும் காண்கின்றார். கட்சியின் ஒற்றுமையை முதன்மையாக கருதிய லெனின், ஸ்டாலின் பற்றிய குறிப்பில், அவர் கையில் அதிகாரம் குவிந்திருப்பதால் அதை அவர் போதுமான முன் எச்சரிக்கையுடன் கையாள்வதில் தவறு இழைப்பார் என்ற சந்தேகத்தை முன்வைக்கின்றார். இதனால் மட்டும் பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை பிரேரிக்க கோருகின்றார். இதை அவர் குறிப்பிடும்போது, தோழர்களை அணுகும் முறைகளில் இவரை விடச் சிறந்தவர் மட்டும், அதாவது மற்றையவற்றில் அல்ல என்பதை தெளிவாக லெனின் குறிப்பிட்டார். ஆனால் இன்று இதை மறுத்து வர்க்க அரசியல் மார்க்கத்தில் பொதுமைப்படுத்தி, வர்க்கப் போராட்டத்தையே உயிருடன் அரித்து தின்கின்றனர். இதைத் தான் அன்று குருசேவ் என்ற ஜனநாயகவாதியும் செய்தான். இந்த குருசேவ் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருந்ததும், ஏன் பெர்லின் மதிலை அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜனநாயகவாதி குருசேவுக்கும் இடையில் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்துக்கு இணங்க, மேற்கு ஜெர்மனி கட்டிடப் பொருளை இலவசமாக வழங்க, கம்யூனிசத்தின் பெயரில் கைக்கூலி குருசேவால் கட்டப்பட்ட மதில் மூலம், கம்யூனிசத்தை இரும்புத் திரை ஜனநாயகமாக காட்டிய செம்மல் ஆவர்.

லெனின் டிராட்ஸ்கி பற்றி, யாவரிலும் வல்லமை வாய்ந்தவர் என்றதுடன், நிர்வாகத் தன்மை வாய்ந்த அணுகுமுறை மற்றும் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை குறைகளாக லெனின் சுட்டிக் காட்டினார். டிராட்ஸ்கி பற்றிய லெனின் கருத்து நிர்வாகத் தன்மையில் கட்சியை வழி நடத்தும் போது, நிர்வாக வடிவம் அதிகார வர்க்க அணுகு முறையும், தன்னம்பிக்கை வரட்டுத்தனம் சார்ந்து காது கொடுத்து கேட்பதற்கு தயாரின்மையை சுட்டிக் காட்டுகின்றார்

இங்கு ஸ்டாலின் ஒரு கட்சி செயலாளராக இருக்கும் போது, மற்றைய தோழர்களுடன் அணுகிக் கொள்ளும் போக்கில் ஏற்படும் தவறுகள், கட்சியின் உயிரோட்டமுள்ள இயங்கியலை சிதைக்கும் என்பதை லெனின் தெளிவுபடுத்துகின்றார். இங்கு இந்த விமர்சனங்களை லெனின் கட்சி வரலாற்றில் இருந்தே புரிந்து கொள்கின்றாரே ஒழிய, குறிப்பான நிலைமைகள் மற்றும் சம்பவங்களில் அல்ல. குறிப்பான நிலைமை மற்றும் சம்பவத்தில் புரிந்ததாக காட்டுவது, லெனின் மார்க்சியத்தையும், அவரின் சர்வதேசிய வீச்சையும் சிறுமைப்படுத்தி தமக்கு சதகமாக்க கொச்சைப்படுத்துவதாகும். இது போலி இடதுசாரி வேஷத்தின் பின் வர்க்க போராட்டத்தின் உயிராற்றலை கொன்றுவிடுவதாகும்;. சர்வதேசியம் மற்றும் சோவியத் புரட்சிக்கான தத்துவார்த்த தலைமையை தொடர்ச்சியாக லெனின் வழங்கி வந்ததும், கட்சியின் மற்றைய தோழர்கள் இதில் அதிகம் தேர்ச்சி பெற்ற முன்னணி தலைவர்களாக வளர்ச்சி பெறாமையும், லெனின் கட்சிக்குள்ளான முரண்பாடுகள் மேல், வெற்றிகரமாக பாட்டாளி வர்க்க தலைமையை கோட்பாடு சார்ந்து நிறுவியதுடன், மார்க்சியத்தை வளர்த்து விரிவாக்கியதன் ஊடாக, வென்று எடுத்த போக்கில் இருந்து, தனது மரணத்தின் பின்பு என்ன வகையில் இவை கையாளப்படும் என்றே அஞ்சினார். ஸ்டாலின் நடைமுறை சார்ந்து (இங்கு கோட்பாட்டு பங்களிப்பை மார்க்சியத்துக்கு தொடர்சியாக செய்துள்ளர்) அதிகமாக கட்சி வரலாற்றை கொண்டிருந்தமையும், டிராட்ஸ்கி போல்ஷ்;விக் புரட்சிக்கு முன் பின் என்ற இரு காலத்திலும், இடை நடுபாதை, எதிர்நிலை, சதி போன்றவற்றை தனது முரண்பாட்டின் மீது அடிப்படையாக கொண்டே தனது அரசியலை, பாட்டாளி வர்க்க கோட்பாடு அடிப்படை சாராத நிலையில் கையாண்டமையால், இதனால் கட்சியின் முரண்பாடு எதிர் நோக்கும் அபாயத்தை புரிந்து கொண்டார். நடைமுறையில் எதிரியை உடனடியாக அடையாளம் காண்பதும், இடைநிலை போக்கு சார்ந்து நழுவலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பவாதத்தின் சூழ்ச்சியை வெறுப்பது, நடைமுறை சார்ந்து போராடுபவர்கள் உடனடிக் குணாம்சமாக இருக்கின்றது. இதில் தனிப்பட்ட நபர்களின் குணம்சம் கூட இதை மேலும் ஊக்கிரமாக்கும் என்பதை காண்கின்றார். லெனின் மரணத்தின் பின்பு ஸ்டாலின் சோசலிசத்தை கட்ட முடியுமா?, இல்லையா? என்ற அடிப்படையான விவாதம் மீது (இது ட்ராட்ஸ்கி தனது தலைமையை நிறுவ உருவாக்கிய பிரதான முரண்பாடும், கோட்பாடுமாகும்), லெனின் தத்துவார்த்த பங்களிப்பை போன்று ஸ்டாலின் தனது பங்களிப்பை சோசலிசத்தை கட்ட முடியும் என்று தத்துவார்த்த துறை சார்ந்து அதை நிறுவினார். சோசலிசத்தை கட்ட முடியாது என்ற டிராட்ஸ்கியும் கட்ட முடியும் ஆனால் வர்க்கப் போராட்டமின்றி என்ற புக்காரின்; இந்த விவாதத் தளத்தில் தத்துவார்த்த துறை சார்ந்து நிறுவ முடியாது சிறுபான்மையான போது, அவர்கள் கோட்பாட்டு விவாதம் அல்லாத வழிமுறைகளை கையாளத் தொடங்கினர்.

ஸ்டாலின் பற்றிய லெனினின் கருத்தை எடுத்துக் கொண்ட லெனின் கட்சி, ஸ்டாலினை தொடர்ந்து கட்சிச் செயலாளராக தேர்ந்து எடுக்கின்றது. ஸ்டாலின் இல்லாத புதிய தலைவரை கட்சி கண்டறியவில்லை. கட்சி தனது போல்ஷ்விக் வரலாற்று போராட்டத்தினூடாக, தனது சொந்த தலைவரை தெரிந்து எடுப்பதில் உறுதியாகவே இருந்தது.

ஸ்டாலின் லெனினுக்கு பின்பாக பாட்டாளி வர்க்க தலைமையை முன்னெடுத்த போது, அவர் அதை பாதுகாப்பதில் என்றும் பின்வாங்கியதில்லை. பாட்டாளி வர்க்க வர்க்கப் போராட்டத்தை நடத்துவதில் அவரின் மரணம் வரை, அனைத்து சர்வதேச உறவுகளில் இருந்து உள்நாட்டு உறவுகள் ஈறாக உறுதியாக விட்டுக் கொடுக்காத பாட்டாளி வர்க்க தலைவராக இருந்தார். கோதா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்தில் மார்க்ஸ் கூறியத போல் ~~இங்கு நாம் கையாள வேண்டியது அதன் சொந்த அடித்தளத்தின் மீது வளர்ச்சியுற்ற என்கிற முறையிலான கம்யூனிச சமுதாயத்தைப் பற்றி அல்ல் ஆனால் மாறாக, முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்பொழுது தான் உதிக்கும் சமுதாயத்தைப்பற்றி; அது பொருளாதார ரீதியில், அறிவுத்துறை ரீதியில் இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் இன்னமும் அது உதிக்கும் கருப்பையான பழைய சமுதாயத்தின் பிறப்புச் சின்னங்களால் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது. என்று மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதற்காக, ஏன் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று வரையறுத்தாரோ, அதை கையாள்வதில், விளக்குவதில், முன்னெடுப்பதில் உறுதியான வர்க்க நிலையை ஸ்ராலின் கையாண்டார். இதை ட்ராட்ஸ்கி, புக்காரின் போன்றவர்கள் எதிர்த்தனர். ஏன் இன்று ஸ்ராலினை தூற்றும் அனைவரும் இதை எதிர்க்கின்றனர்.

1.12.1934ம் ஆண்டு ஸ்டாலின் எதிர்ப்பு முன்னணி தலைவர்களின் இரகசிய சதி மூலம், ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரும், முன்னணித் தலைவருமான கிரோவ் படுகொலை செய்யப்ட்டதைத் தொடாந்து, ஸ்டாலின் சதி மற்றும் நாச வேலையை கட்டுப்படுத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. இந்த படு கொலைக்கு முன்பாக நடந்த 17 வது கங்கிரசில் புகாரின், ரைகோவ், டோம்ஸ்கி போன்றோர் சுயவிமர்சனம் செய்தனர். ட்ராட்ஸ்கிய வாதிகளான ஜினோவிவ், காமனோவ் ஆகியோர் கட்சியை புகழ்ந்ததுடன், தமது தவறுகளை கடுமையாக சுயவிமர்சனம் செய்தனர். இவர்கள் இனியும் கருத்து தளத்தில் போராடி ஸ்ராலினை முறியடிக்க முடியாது என்பதால் சுயவிமர்சனத்தை செய்தபடி, இரகசியமான படுகொலைகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்தனர். இதை டிராட்ஸ்கிய நான்காம் அகிலம் சர்வதேச ரீதியாக முன்வைக்க, அதைப் பெருமைபட தொழிலாளர் பாதை தமது வீரதீரச் சதிச் செயலை முன்வைக்கின்றது. டிராட்ஸ்கி தனது சுய வரலாற்றில், தனது மகன் 1923 இல் இருந்தே சட்ட விரோதமாக, லெனின் உயிருடன் இருந்த போதே கட்சிக்கு எதிராக இயங்கியதாக பெருமையுடன் குறிப்பிடுகின்றார். இந்த சதிகளில் பங்குபற்றி இன்று உயிருடன் தப்பி வாழும் நபர்கள், இந்த சதியை பெருமைபட முன்வைக்கின்றனர். இந்த படுகொலை இரகசியக் குழுக்களில் இயங்கியோர் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.

இச் சதிகளில் ஈடுபட்ட முன்னணி தலைவர்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை கட்சியில் கடைப்பிடித்தார்களா? 1925 இல் 14வது காங்கிரஸ்சில் டிராட்ஸ்கி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும், புகாரின் அமைதியான முதலாளித்துவ வளர்ச்சியூடாக சோசலிசத்தை அடையாளம் என்றும், காமனோவ், ஜினோவிவ் பொருளாதாரத்தில் சோவியத் பிற்போக்காக இருப்தால் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும் முன்வைத்தனர். டிராட்ஸ்கி சோசலிசம் கட்ட முடியாது என்று கூறி அப்படி கட்டப்படின் ~~தோல்வியடையும் - அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலியன் சர்வாதிகாரமாக முடியும் என்ற கூறி எதிர்த்து நின்றார். ஆனால் ஸ்டாலின், லெனின் தொடரக் கோரிய வர்க்கப் போராட்ட அரசியலை முன்வைத்தார். அரசும் புரட்சியும் என்ற நூலில் லெனின் ~~முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுதலடைவது நிச்சயம் ஒரு பிரம்மாண்டமான மிதமிஞ்சிய மற்றும் பல்வேறு வகையான அரசியல் வடிவங்களை பெற்றுத் தராமலிருக்க முடியாது; ஆனால் சாராம்சத்தில் தவிர்க்க முடியாமல் ஒன்றாகவே இருக்கும்: பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்றார். இந்த மாற்றம் தொடர்பாக லெனின் ~~மீண்டும் தொழிற் சங்கங்கங்கள் மீது, தற்போதைய நிலைமையும் ட்ராட்ஸ்கி மற்றும் புகாரினது தவறுகளும் என்ற கட்டுரையில் ~~அரசியல் என்பது பொருளாதாரத்தின் மீது அரசியல் முன்னிலை பெறாமல் இருக்க முடியாது. வேறுவிதமாக வாதிடுவதன் பொருள் மார்க்சியத்தின் அரிச்சுவடியை மறப்பதாகும்.....எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு (குடிமக்கள் மீது) ஒரு சரியான அரசியல் அணுகு முறையின்றி வர்க்க ஆட்சியை நிலைநாட்ட முடியாது; அதன் விளைவாக அதன் சொந்த உற்பத்தி பிரச்சினையே தீர்க்க முடியாது என்று தொடர வேண்டிய சோசலிச புரட்சியின் வர்க்கக் கடமை பற்றி தெளிவுபடுத்துகின்றார். இதை புகாரின், டிராட்ஸ்கி மறுத்து ~~தனிநாட்டில் சோசலிசம் கட்ட முடியாது அல்லது மெதுவாக மாறும் என்ற போது, இதை ஸ்டாலின் கோட்பாட்டு ரீதியில் அம்பலம் செய்து முறியடித்தார். அங்கு இவைகளை விவாதிக்கும் உரிமை ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில், கட்சியில் கட்சி சுதந்திரம் தெளிவாக இருந்தது. கட்சியில் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான கருத்துச் சுதந்திரம் இருந்த போதும், 1926 இல் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவிய, கட்சிக்குள்; பகிரங்கமாகவே எதிர்க் குழுவைக் கட்டினர். கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாக கொண்ட மார்க்சியத்தை மறுக்கும் வடிவமாக இது உருவானது. இது பொது விவாதம், பெரும்பன்மை சிறுபான்மை கட்டுப்படும் கட்சி நடைமுறை, கட்சியில் பகிரங்கமாக கருத்தை வைக்கும் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான நேர்மை, என அனைத்தையும் மறுத்தே, எப்போதும் குழுவடிவம் தோற்றம் பெறுகின்றது. இதன் தொடர்ச்சியாக 1927 இல் கட்சியில் விவாதம் ஒன்றை உருவாக்கி, தொழில் மயமாக்கல் தீவிரமாக்கவில்லை என்றும், விவசாயிகளை தொழிலாளருடன் இனைக்கும் கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விவசாயி முரண்பாடு இயல்பானது என்றும், அதை தீவிரமாக்கும் படி கோரி நடந்த கட்சி விவாதத்தில் அரசியல் ரீதியாக 1920 இல் நடந்தது போல் தோற்கடிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமது சிறுபான்மை கருத்தை வைத்து கட்சிக்குள் போராடுவதற்கு பதில், மொஸ்கோ மற்றும் லெனின் கிராட்டில் பகிரங்கமான அரசுக்கு எதிரான ஆர்ப்பட்டத்தை செய்தனர். கட்சியின் எதிரிகளை துணைக்கு அழைத்தனர். இதன் தொடர்ச்சியில் தான் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவியும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இங்கு யார் கட்சி ஜனநாயகத்தை கேடாக பயன்படுத்தினர். யார் கட்சியின் உயிர்ரோட்டமான ஜனநாயகத்தை இழிவாக்கினர்? ஜனநாயக மத்தியத்துவத்தை மறுத்து, அதை அர்த்தமற்றதாக்கிய படி கட்சிக்குள் கட்சி கட்டி, கட்சிக்கு எதிராகவே போரட்டத்தை பகிரங்கமாக வெளியில் நடத்துகின்றவர்கள் பற்றி லெனின் என்ன கூறுகின்றார்.

~~இடதுசாரி கம்யூனிசம்... என்ற நூலில் லெனின் ~~ருசியாவில் நாங்கள் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு அல்லது கம்யூனிசத்தின் முதல் கட்டத்திற்கு மாறுவதில் முதல் படிகளின் வழியாகப் போகிறோம். (முதலாளித்துவ வர்க்கம் தூக்கியெறியப்பட்டதிலிருந்து மூன்றாவது ஆண்டில்) வர்க்கங்கள் நீடிக்கின்றன: பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் வெல்லப்பட்ட பிறகு பல ஆண்டுகளாக எங்கெங்கும் அவை நீடிக்கும். ஒரு வேளை இங்கிலாந்தில் அங்குதான் விவசாயிகள் இல்லை. (ஆனால் அங்கும் சிறு உடமையாளர்கள் இருக்கிறார்கள்) இந்த காலகட்டம் குறுகியதாக இருக்கலாம். வர்க்கங்களை ஒழிப்பதன் பொருள் நிலப்பிரபுகள், முதலாளிகளை விரட்டியடிப்பது மட்டுமல்ல - அதை ஒப்பீட்டு வகையில் எளிதில் சாதித்து விட்டோம். அதன் பொருள் சிறு பண்ட உற்பத்தியாளர்களை ஒழித்து கட்டுவதும் கூட ஆகும். அவர்களை விரட்டியடிக்க முடியாது அல்லது நசுக்க முடியாது; அவர்களோடும் இணக்கமாக நாம் வாழவேண்டும்; மிகவும் நீண்ட, நெடிய, மெதுவான, எச்சரிக்கையான ஸ்தாபன வேலையால் மட்டுமே மறுவார்ப்பும், மறுபோதனையும் செய்யமுடியும்; (செய்ய வேண்டும்) அவர்கள் குட்டி முதலாளித்துவ தன்னியல்போடு ஒவ்வொரு பக்கமும் முற்றுகையிடுகிறார்கள்; அதனால் பட்டாளி வர்க்கத்தக்குள் ஊடுருவி மாசுபடுத்துகிறார்கள்; அவர்களின் குட்டி முதலாளித்துவ முதுகெலும்பற்ற நிலை, ஒற்றமையின்மை, தனிமனிதப் போக்கு, எக்களிப்பு அல்லது சோர்வு என்ற மாறும் மனோநிலை ஆகியவற்றுக்கு பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் பின்னிழுத்துத்தள்ள இடையராது காரணமாக இருக்கின்றார்கள். இதற்கு எதிர்விணையாற்றும் பொருட்டும், பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தாபனப்படுத்தும் பாத்திரத்தை (மேலும் அது பிரதான பாத்திரம்) சரியாகவும், வெற்றிகரமாகவும், வெல்லத்தக்கவாறும் செலுத்தும் பொருட்டும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சிக்குள் கறாரான மையப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடு தேவையாயிருக்கிறது. பழைய சமுதாயத்தின் சக்திகள் மற்றும் மரபுகளுக்கெதிரான இரத்தம் சிந்தியும், இரத்தம் சிந்தாமலும், வன்முறையாகவும் அமைதியாகவும், இராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், கல்வி துறையிலும், நிர்வாகத் துறையிலும் ஒரு இடையராத போராட்டமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். பத்து லட்சம் பல பத்து லட்சங்களின் பழக்க வழக்கங்களின் சக்தி ஒரு மிகப்பெரும் பயங்கரமான சக்தி. போராட்டத்தில் எஃகுறுதியாக்கப்பட்ட கட்சியின்றி, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தில் நேர்மையான அனைத்திடமும் நம்பிக்கையைப் பூரணமாகப் பெற்ற ஒரு கட்சியின்றி, பரந்துபட்ட மக்களின் மனோநிலையை கூர்ந்து நோக்கி செல்வாக்கு செலுத்தும் வல்லமையுடைய ஒரு கட்சியின்றி, இம்மாதிரியான ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது சாத்தியமில்லை. லட்சோப இலட்சம் சிறு உற்பத்தியாளர்களை வெல்வதை விட மத்தியத்துவப்படுத்தப்பட்ட பெரு முதலாளிகளை வென்றடக்குவது ஓராயிரம் மடங்கு எளிதானது; இருப்பினும் அவர்கள் தங்களது சாதாரமான, தினசரி புலனறிவுக்கு உட்படாத, நழுவக்கூடிய மனோதைரியத்தை இழக்கச் செய்யும் நடவடிக்கையின் மூலம் முதலாளிகளுக்குத் தேவையான முதலாளித்துவ வர்க்கத்தை திரும்ப நிலை நாட்டுவதற்கு விழையும் அதே விளைவைச் சாதிக்கிறார்கள். பாட்டாளி வர்க்கக் கட்சியின் எஃகுறுதி வாய்ந்த கட்டுப்பாட்டை எவரொருவர் சிறுமைப்படுத்துகிறாரோ (குறிப்பாக அதன் சர்வாதிகார காலங்களின் போது) அவர் உண்மையில் பாட்டாளி வர்க்கத்திற்கெதிராக முதலாளித்துவ வர்க்கத்திற்கு உதவுகின்றார் என்று மார்க்சியத்தை தெளிவுபடவே வரையறுக்கின்றார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஆணையில் வைத்து, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் கட்சிக்கு, எதிராக ஜனநாயக மத்தியத்துவத்துக்கு புறம்பாக நடத்தப்படும் எல்லாவிதமான செயற்படும், முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சியேயாகும். ஒருநாட்டில் சோசலிசத்தை கட்டமுடியுமா என்ற அடிப்படையான விடையம் தொடர்பாகவும், மாற்றுக் கருத்துக்கு 1920, 1930 களில் கருத்துச் சுதந்திரத்தை கட்சி வழங்கிவிடவில்லை என்று யாரும் நிறுவிவிடமுடியாது. அத்துடன் அங்கு ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் பிரதான ஜனநாயக வடிவமாகவும் இருந்தது. இதை யாரும் மறுக்க முடியாது. டிராட்ஸ்கி முதல் பலரும் தமது கருத்தை கட்சியில் வைத்து விவாதிக்கவில்லையா? அங்கு தோற்கடிக்கப்பட வில்லையா?

1927 இல் கட்சிக்கு எதிராக ட்ராட்ஸ்கி, ஜினோவிய தலைமையில் லெனின்கிராட், மஸ்கோவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் எதிரிகள் உசார் அடைந்தனர். குலாக்குகள் அரசுக்கு தனியத்தை விற்க மறுத்தனர். அதே நேரம் புகாரின் - ரைகோவ் குலாக்குகள் மீது கடுமையான தாக்குதல் அவசியமில்லை என்றனர். புகாரின் விவசாயிகளைப் பார்த்து நீங்கள் (விவசாயிகள்) உங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். மேலும் அவர் சோசலிசத்தை கட்டுவதைப் பற்றி ~~நாங்கள் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து முன்னேறுவோம். பெருந்தொகையான குடியான்கள் என்ற வண்டியை நாம் எம்மோடு இழுத்துச் செல்ல வேண்டும் என்றார். கைத்தொழில் மயமாக்கல் மக்களுக்கு பெரும் சுமை என்ற கூறி, அதை கைவிடக் கோரினர். ஆனால் ஸ்டாலின் இதை மறுத்து வர்க்கப் போராட்டத்தை தொடுக்க கட்சிக்கு வழிகாட்டினார். மற்றவர்கள்; தமக்கிடையில் உள்ள முரண்பாட்டை விட, ஸ்ராலினை எதிர்ப்பது முக்கியமானது என்ற முடிவுக்கு வந்தனர். வர்க்கங்களை சமரசம் செய்து கொண்டு செல்ல தெரியாத சதிகாரனாகவும், அதில் கொள்கையற்றவனாகவும் ஸ்ராலினை வருணித்து, இரகசியமாக சதி செய்யவும் தயங்கவில்லை. ~~அவன் கொள்கைகள் அற்ற சதிகாரன்: பழிவாங்கவும் முதுகில் குத்தவும் மட்டுமே அவனுக்குத் தெரியும் என்றான் புகாரின். கூட்டுப் பண்ணையாக்கலில் சலுகை வழங்கிய போராட்டத்தை கோரிய போது (அதாவது ~~நமது விசாலமான விவசாய வண்டியை நம் பின்னால் இழுத்துக் கொண்டு சிறுசிறு எட்டுகள் வைத்து நாம் முன்னேறுவோம் என்று புகாரின் கட்சியிடம் சலுகையாக கேரிய போது), இங்கு வலதுக்கும் இடதுக்கும் இடையில் கட்சி போராடிய போது, சலுகையின் அடிப்படையில் கொடுத்த வலது இடது ஆதாரவை, அடுத்தகட்ட வர்க்க ஒழிப்பில் கட்சி மறுத்த போதே, இப்படி புகாரின் வருணித்தார். வலதுக்கும் இடதுக்கும் இடையில் கட்சி தனது வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்த போது, இடதை எதிர்க்கும் போது வலதும், வலதை எதிர்க்கும் போது இடதும் பெற்ற சலுகைகளை எதிர் கொண்டே, ஸ்ராலினின் வலதுக்கும் இடதுக்கும் எதிரான இரண்டு பக்க போராட்டத்தையே கொள்கையற்றதாக வருணித்து, சதியாக வருணிக்க முடிகின்றது. இங்கு இடது வலது அல்ல பிரச்சனை, இதை அடிப்படையாக கொண்ட வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதா? இல்லையா? என்பதே பிரச்சனை. இதற்கு எதிரான போக்கே சதியாகும். வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் போக்குக்கு எதிரான போராட்டத்தையே, சதியாக வருணிப்பது ஸ்டாலின் எதிர்ப்பின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். புகாரின் இதற்காக இரகசிய சதிகளில் ஈடுபட்டதை தொடர்ந்தே, புகாரினை கட்சியின் மத்திய குழுவில் இருந்தும், கட்சியில் இருந்தும் வெளியேற்றியது.

கட்சியின் உயிரோட்டமான கருத்துச் சுதந்திரத்தை, சதிப்பாணியிலான வடிவத்துக்கு நகர்த்திச் சென்றதில், ஸ்டாலின் எதிர்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. உள்ளடக்கத்தில் சதிகளின் மூலம் கட்சியின் பெருபான்மையை எதிர்க்க கிளம்பிய போது, கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை முறைகேடாக கையாண்டனர். ஸ்ராலினை ஏன் எதிர்த்தார்கள். அதாவது ஸ்ரானிலிசம் என்று எதை இன்றும், அன்றும் அடையளப்படுத்துகின்றனர். ~~ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட (வர்க்கப் போராட்டத்தை தொடர) முடியுமா? இல்லையா? என்ற அடிப்டையான கேள்வி மீதே, இது மையப்படுகின்றது. ஸ்ராலினிசியமாக இருப்பது ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்ற தொடரும் வர்க்கப் போராட்டப் பாதையே. இதை எதிர்ப்போர் கட்டமுடியாது என்பதன் மூலம், வர்க்க சராணாகதியை கோரினர். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்ராலினிசியம் என்றால், அது லெனிசமாக இருக்கின்றது. அதைப் பார்ப்போம்;.

1915 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கிய பின்பு மென்ஷ்விக்குள் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்ற போது, டிராட்ஸ்கியும் இது சாத்தியமில்லை என்றார். ஆனால் லெனின் ~~ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் என்ற முழக்கம் பற்றி என்ற கட்டுரையில் ~~ஒரு தனிப்பட்ட முழக்கம் என்கிற வகையில் உலக ஐக்கிய நாடுகள் என்பது சரியானதாக இருக்க முடியாது. எனெனில் இதற்கு, ஒரு தனி நாட்டில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமானதல்ல என்று தவறான பொருள் வழங்கப்படக்கூடும் என்றார். லெனின் புரட்சிக்கு பின்பு ~~ரசியாவில் பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிரான ஒரே உத்திரவாதம், மேற்கு நாட்டில் ஏற்படுகிற ஒரு சோசலிசப் புரட்சிதான். ஆனால் இதை நினைத்த மாத்திரத்தில் வரவழைக்கக் கூடிய ஒரு நிலையில் நாம் இல்லை. ஆனால் ஒரு சார்பு நிலையான, நிபந்தனைக்கு உட்பட்ட ~உத்திரவாதம் ஒன்று உண்டு. ரசியாவில் கூடுமான வரை மிகமிக விரிவான விளைவுகள் ஏற்படுத்துகின்ற, முரணற்ற, உறுதியான முறையில் புரட்சியை நிறைவேற்றுவதில்தான், பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிராகக் கூடுமான வரையில் மிகவும் சாத்தியமான தடைகளை எழுப்புவதில் பொதிந்துள்ளது. என்றார். இதுதான் 1925 களில் மீளத் தொடங்கிய அரசியல் விவாதத்தின் அடிப்படையும், உள்ளடக்கமாகும். அதாவது ஸ்ராலினிசமாகவும் அதன் மீதான எதிர்ப்பாகவும் இருப்பதன் அரசியல் உள்ளடக்கமும் இதுதான். ஆனால் ஸ்டாலின், லெனின் ஓரே கட்சியின் நீண்ட காலத் தலைவர் என்ற வகையில், லெனினியத்தை முன்னெடுப்பதில் வேறு யாரையும் விட முன்னணியில் இருந்தார். லெனின்; ஏழாவது காங்கிரஸ்சில் ~~ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க அரசின் கரங்களில் உள்ள பொருளாதாரச் சக்தியானது, கம்யூனிசத்தை நோக்கிய மாறுதலை உறுதி செய்ய போதுமானது. என்றார். கூட்டுறவு பற்றிய கட்டுரையில் ~~நம்மை இப்போது எதிர்கொண்டிருப்பது இக் கலாச்சார புரட்சிதான். இக்கலாச்சாரப் புரட்சியானது, நம் நாட்டை ஒர் முற்றிலும் சோசலிச நாடாக உருவாக்குவதற்கு போதுமானது என்றார். இது போல் லெனின் பல தரம் இதை விரிவாக்கியுள்ளார். இதை ட்ராட்ஸ்கி தொடர்ச்சியாக எதிர்த்ததுடன், இதையே ஸ்ராலினிசமாக, லெனினை முடி மறைத்தபடி மார்க்சியத்துக்கு எதிரானதாக காட்டினர்.

ஒரு நாட்டில் புரட்சிக்கு பின்பு வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து சோசலிசத்தை கட்டுவதா இல்லையா என்ற கேள்விக்கு டிராட்ஸ்கி ~~தோல்வியடையும் -அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலிய சர்வாதிகாரமாக முடியும் என்றதன் மூலம், ஸ்ராலினை எதிர்த்தன் மூலம், மீளவும் பழைய மென்ஷ்விக்குகள் நிலையில், லெனினை மறுத்து நின்றார். இதை பின்னால் இழிவாக்கி ஸ்ராலினிசமாக்கினார். ஸ்ராலினுக்கு பதில் ட்ராட்ஸ்கி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியாது. அது தேங்கிவிடும் அல்லது சர்வாதிகார நெப்போலியன் ஆட்சியாகி விடும் என்று கூறிய படி, பழையதுக்கு திரும்பிச் செல்வதையே முன்வைத்திருக்க முடியும். இதைத் தாண்டி அவரால் தனது கோட்பாட்டுக்கு விளக்கம் சொல்ல முடியாது. இதைத்தான் இன்று தூக்கி பிடித்து காவடி எடுப்பதன் மூலம், முன்வைக்கும் ஸ்டாலின் எதிர்ப்பின் வர்க்க நோக்கம் தெட்ட தெளிவானவை. இந்த அரசியல் உள்ளடகத்தில் தான் ஸ்டாலின் முரண்பாடு உருவாகின்றது. கட்சி எதற்காக உருவாக்கி, எதற்காக போராடி புரட்சியை நடத்தியதோ (இந்த போராட்டத்தில் ட்ராட்ஸ்கி எதிர்த்தே நின்றவர்), அந்த கட்சியின் நோக்கத்தை எதிர்த்த போது, கட்சியில் தொடர்ச்சியாக தோற்றுப் போனர்கள்;. கட்சி இவைகளை விவாதிகவும், கருத்தை வைக்கவும் வழங்கிய ஜனநாயக மத்தியத்துவத்தையும், அரசியல் அதிகாரத்தையும் முறை கேடாக பயன்படுத்தினர். கட்சியின் ஜனநாயகத்தை குழதோண்டி புதைத்தன் மூலம், சதிகளை திட்டமிட்டனர்.

லெனின் தொடரும் வர்க்கப் போராட்டத்தைப் பற்றி பஞ்சத்தை முறியடிப்பது என்ற அறிக்கையில் ~~ஆ! தொழிலாளர் வர்க்கம் பழைய முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து ஒரு இனப்பெருஞ் சுவற்றால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் ஒரு தனி நபர் இறந்து போகும் விவகாரத்தில், இறந்தவர் சாதாரணமாகத் தூக்கிச் சென்று விடப்படுவதைப் போல் புரட்சியின் போது நடப்பதில்லை. பழைய சமுதாயம் சிதைவுறும் போது அதன் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து ஆணியடித்து சவக்குழியில் புதைத்து விட முடியாது. நமது மத்தியிலேயே அது உருக்குலைகிறது. பிணம் அழுகுகின்றது. நமக்கு நச்சிடுகிறது. என்றார். எதிரி வர்க்கத்தைச் சார்ந்து கட்சியின் சிறுபான்மை, எதிர் புரட்சிக்கு முயற்சி எடுத்தது. நச்சிட்டது.

புரட்;சி நடந்த நாடுகளில் இருக்கக் கூடிய பொது விதி கூட. சோவியத்தில் நடந்தவை வர்க்கப் போராட்டத்தின் புற நிலைமையின் விளைவே ஒழிய, ஸ்டாலின் தனிபட்ட அகநிலையோ, நாட்டின் பொதுவான நிலைமையோ அல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தின் வேறுபட்ட வர்க்கத்தினை பிரதி செய்தவர்களின், ஜனநாயக விரோத வன்முறை அரசியல் தான் மஸ்கோ விசாரனையாகும்.

வர்க்கப் போராட்டத்தை சிதைக்க முயல்பவர்களை எதிர்த்து எப்படி போராட வேண்டம் என்பதை லெனின் சோவியத் அரசாங்கத்தின் உடனடிக் கடமைகள் என்ற பிரசுரத்தில் ~~முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான ஒவ்வொரு மாறுதலின் போதும் இரண்டு முக்கிய காரணங்களுக்காக அல்லது இரண்டு முக்கிய வழிகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம். முதலாவதாக சுரண்டலாளர்களின் எதிர்ப்புகளை இரக்கமற்ற முறையில் நசுக்குவது இன்றி முதலாளித்துவம் வீழ்த்தப்படவும் ஒழித்துக்கட்டப்படவும் முடியாது. சுரண்டலாளர்களிடமிருந்து அவர்களது செல்வத்தை அறிவிலும் அமைப்புத் துறையிலும் அவர்களுக்கு உள்ள சாதகத்தை உடனடியாகப் பறித்துவிட முடியாது. அதன் பயனாய் அவர்கள் வறியவர்களின் வெறுக்கத்தக்க ஆட்சியை (ஒரு நீண்ட காலத்திற்கு) தூக்கியெறிவதற்குத் தவிர்க்க முடியாமல் முயன்று கொண்டிருப்பார்கள். இரண்டாவதாக ஒவ்வொரு மாபெரும் புரட்சியும் குறிப்பாக ஒரு சோசலிசப் புரட்சியும் உள் நாட்டு யுத்தம் இல்லாமல் நினைத்துப் பார்க்கமுடியாது.... ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ஊசலாட்டங்களையும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடுகின்ற உதாரணங்களையும் உள்ளடக்கியதாகும்.... முந்தைய புரட்சிகளின் துரதிஷ்டம் என்னவென்றால் உருக்குலைக்கும் கூறுகளை ஈவு இரக்கமின்றி நசுக்க மக்களுக்கு பலத்தைத் தொடுக்கவும், அவர்களை ஒரு இறுக்கமான நிலையில் வைத்திருக்கவுமான புரட்சிகர உற்சாகம் நீண்ட காலத்திற்கு நீடிக்காதுதான் பரந்துபட்ட மக்களின் இந்த புரட்சிகர உற்சாகத்தின் நிலையின்மைக்கான சமுதாய வர்க்கக் காரணம் பாட்டாளி வாக்கத்தின் பலவீனம்தான்.... என்று தெளிவுபடவே விளக்குகின்றார். இதைத் தான் ஸ்டாலின் ~ஒருநாட்டில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதற்கு எதிரான, சதிக் குழுக்களை ஈவிரக்கமின்றி ஒடுக்க போராடினர். இதில் தோற்றப் போய்யிருந்தால் 1956 இல் குருசேவ் உருவாகியிருக்க வேண்டிய வரலாறு தோன்றிருக்காது. அது 1930 களிலேயே ஏற்பட்டு இருப்பதுடன், பாசிசம் உலகை ஆண்டிருக்கும்.

ஸ்டாலின் வர்க்க முரண்பாடு தொடர்ந்து இருப்பதாக, மார்க்சியத்துக்கு புறம்பாக இட்டுக் கட்டியே இந்த சதி பற்றி கற்பித்ததாக இடதுசாரி வேடதாhரிகள் மார்க்சியத்தை திரிக்கின்றனர். வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு பின்பு மிக தீவிரமாக மாறுவதுடன், எல்லாவிதமான முறையிலும் எதிரி வர்க்கம் போரட்டத்தை முன்னெக்கின்றது. இது ஸ்டாலின் கற்பனையல்ல. இது மார்க்சியத்தின் அரசியல் உள்ளடக்கம். இதையே ஸ்டாலின் முன்னெடுத்தார். இவை பற்றி மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் அதிக அனுபவத்தை நடைமுறையில் சந்திக்க விட்டாலும், முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றுவாய்கள் பற்றி பலமுறை குறிப்பிட்டே எழுதியுள்ளனர். அவைகளை நாம் பார்ப்போம்.

மார்க்ஸ் ~~பிரான்சில் வர்க்கப் போராட்டம் என்ற தலைப்பில் பொதுவாக வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக் கட்டுவதற்கு, அவை தங்கியிருக்கும் எல்லா உற்பத்தி உறவுகளைனயும் ஒழித்துக் கட்டுவதற்கு, இந்த உற்பத்தி உறவுகளுக்குப் பொருத்தமான எல்லா சமூக உறவுகளையும் ஒளித்துக் கட்டுவதற்கு, இந்த சமூக உறவுகளில் இருந்து விளையும் எல்லாக் கருத்துகளையும் புரட்சிமயமாக்குவதற்கு அவசியமான மாறுதலுக்கான முறை என்கிற வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, புரட்சியின் நித்தியத்துவத்தைப் பிரகடனப்படுத்தவது சோசலிசம் என்றார்.

இதையே லெனின் ~~வர்க்கங்களை ஒழிப்பது ஒரு நீண்ட, இடர்பாடுகள் மிக்க மற்றும் உறுதியான வர்க்கப் போராட்டத்தைக் கோருகிறது. மூலதனத்தின் அதிகாரம் தூக்கியெறியப்பட்ட பிறகு முதலாளித்துவ அரசு நொருக்கப்பட்ட பிறகு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்பட்ட பிறகு (பழைய சோசலிசம், மற்றும் பழைய சமூக ஜனநாயகம் ஆகியவற்றின் ஆபாசமான பிரதிநிதிகள் கற்பனை செய்வது போல்) வர்க்கப் போராட்டம் மறைந்து விடுவதில்லை; மாறாக வெறுமனே அதன் வடிவங்களில் மாறுதலடைகிறது; மேலும் பல விவகாரங்களில் மிகவும் கடுமையானதாக மாறுகின்றது என்றார் லெனின்.

இதை மேலும் அவர் ~~பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் அரசியலும் பொருளாதாரமும் என்ற பிரசுரத்தில் ~~பாட்டாளி வர்க்கத்தின் கீழ் சுரண்டும் வர்க்கத்தினர், அதாவது முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் மறைந்து விடவில்லை; எல்லோரும் ஒரே சமயத்தில் மறைந்து விடவும் முடியாது, சுரண்டலாளர்கள் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒழிக்கப்பட்டுவில்லை... இன்னமும் விசாலமான சமூகத் தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களது எதிர்ப்பின் சக்தி ஒரு நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு அதிகாரிக்கின்றது. மக்கள் தொகையில் இருக்க வேண்டியதில் அவர்களது எண்ணிக்கையை விட ஒப்பிட முடியாத அளவு மிகப் பெரும் முக்கியத்துவமுடையதான வகையில் அரசு, இராணுவம் மற்றும் பொருளாதார நிர்வாகத்தின் ~கலை அவர்களுக்கு மேலாண்மையை, ஒரு மிகப்பெரிய அளவிலான மேலாண்மையைக் கொடுக்கின்றது. வென்ற சுரண்டப்படுபவர்களின் முன்னணிக்கு அதாவது பாட்டாளி வர்க்கத்தக்கு எதிராக தூக்கியெறியப்பட்ட சுரண்டலாளர்கள் தொடுக்கும் வர்க்கப் போராட்டம் ஒப்பிட முடியாதவாறு கசப்பானது. மேலும் புரட்சியைப் பற்றி பேசுகையில், இந்தக் கருத்தோட்டம் சீர்திருத்த மாயைகளால் இடமாற்றம் செய்யவில்லையானால், இது வேறானதாக இருக்கமுடியாது. என்றார் லெனின். இதைத் தான் ஸ்டாலின் பின்பற்றினர். லெனின் வர்க்க போதனைகளை உறுதிபட முன்னெடுப்பதில் அவர் இரும்பாக அதாவது ஸ்ராலினாக இருந்தார். இந்த வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுத்த போது, அதில் சில கடுமையான தவறுகளைச் செய்தார். அவை என்ன? எப்படி இத்தவறுகள் நேர்ந்தன. இதற்கு பதிலாக எதை முன்னிறுத்தியிருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

நன்றி தமிழ் சர்க்கிள் : - http://www.tamilcircle.net/Bamini/books/book_05/book_05_16.htm

நன்றி புத்தகப்பிரியன் : - http://puthagapiriyan.blogspot.com/2007/11/blog-post_29.html

தஸ்லிமாவின் மேல் பா.ஜ.க காதல்!!



நன்றி :- தி ஹிந்து